முஸ்லீம்கள் உடன் அமைதியாக வாழ்கிறோம்.. டெல்லி வன்முறைக்கு காரணம் யார் தெரியுமா! பாஜக கவுன்சிலர் பரபர
டெல்லி: அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் டெல்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக பாஜக கவுன்சிலர் கூறிய கருத்துகள் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
டெல்லி ஜஹாங்கிர் பூரி பகுதியில் நேற்றைய தினம் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது அங்கு திடீரென யாரும் எதிர்பாராத வகையில் வன்முறை ஏற்பட்டது.
இந்த திடீர் வன்முறைச் சம்பவத்தில் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பலரும் காயமடைந்தனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பல வாகனங்களையும் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர்.

டெல்லி போலீசார்
இந்தச் சம்பவம் தலைநகர் டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கு ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும், போலீசாரையும் மர்ம நபர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. வன்முறை ஏற்பட்ட சில மணி நேரத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை
டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த அமான் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வடமேற்கு டெல்லியின் துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) உஷா ரங்னானி மற்றும் அமான் கமிட்டி உறுப்பினர்கள் மகேந்தர் பார்க், ஜஹாங்கிர்புரி மற்றும் ஆதர்ஷ் நகர் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த அமான் கமிட்டியில் பல்வேறு சமூகத்தினரும் பங்கேற்ற நிலையில், இது அங்கு விரைவாக அமைதி ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசிபி கோரிக்கை
இந்த கூட்டத்தில், அனைத்து சமூகத்தினரும் அமைதி காக்க வேண்டும் என்று துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) உஷா ரங்னானி வேண்டுகோள் விடுத்தார். மேலும், அவர் பேசுகையில், "இரு சமூகத்தினரும் அமைதியாக இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கத்தைப் பேண வேண்டும். வன்முறை தொடர்பாக நேர்மையாகவும் நடுநிலையாகவும் விசாரணை நடத்தப்படும். குழப்பமான சூழல் ஏற்பட்டால், அதைச் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

குறுக்கிட்ட பாஜக கவுன்சிலர்
இதுபோல குழப்பமான சூழல் நிலவும் போது வதந்திகள் மற்றும் போலி செய்திகள் வேகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற விஷயங்களை யாரும் நம்ப வேண்டாம். சமூக விரோதிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் அவர்களைக் கண்டால், உடனடியாக போலீசாரை அழையுங்கள். நாங்கள் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்" என்றார். அப்போது பாஜக கவுன்சிலர் கரிமா குப்தா குறுக்கிட்டு சில கருத்துகளைத் தெரிவித்தார். இதையடுத்து கூட்டம் அப்படியே பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது.

பிரச்சினை அவர்கள்தான்
கூட்டத்தில் பேசிய பாஜக கவுன்சிலர் கரிமா குப்தா, "இதை நான் பகிரங்கமாகச் சொல்ல விரும்புகிறேன். இந்த பகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் நிம்மதியாக வாழ்கிறோம். நான் நேரடியாக விஷத்திற்கு வந்து விடுகிறேன். இங்கே வசிக்கும் வங்கதேச முஸ்லிம்களால் தான் எங்களுக்குப் பிரச்சினை" என்றார். அப்போது அவரை இடைநிறுத்திய டிசிபி உஷா ரங்னானி, பிரச்சினையைத் திசை திருத்த முயல வேண்டாம் என்று கூறினார்.

பாதியில் முடிந்த கூட்டம்
மேலும், அத்துடன் கூட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்த டிசிபி உஷா ரங்னானி, அனைவரும் அமைதியாக தங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். முன்னதாக டெல்லியில் நேற்று நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலரும் காயமடைந்தனர். டெல்லியில் நடந்த இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications