ஜூன் 1இல் கூடும் "இந்தியா" கூட்டணி கூட்டம்! தேசிய அரசியலில் நடக்க போகும் பெரிய மாற்றம்? அடுத்து என்ன
டெல்லி: லோக்சபா தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்ட நிலையில், 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே அன்றைய தினம் இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுக்க இப்போது லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. 7 கட்டங்களாக நடக்கும் இந்தத் தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. கடைசிக் கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. மொத்தம் 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்த இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
லோக்சபா தேர்தல்: இதற்கிடையே ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1ஆம் தேதி (சனிக்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் இந்தியா இந்தியா கூட்டணி அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் நிலையில், அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
கெஜ்ரிவால்: டெல்லியில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இப்போது இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் ஜூன் 2ஆம் தேதி சரணடைய உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கை விவகாரத்தில் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தல் குறித்தும் கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யவும், விவாதிக்கவும் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில், இதில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்தியா கூட்டணி அப்போதே 272 இடங்களைத் தாண்டிவிட்டதாகவும் மொத்தம் 350 இடங்களில் கூட்டணி வெல்லும் என எதிர்க்கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
மாற்றம்: இந்தியா கூட்டணியிடம் என்டிஏ கூட்டணி படுதோல்வி அடையும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இப்போது ஆறு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. பிரதமர் பதவியில் இருந்து விலகப் போகும் நபர் இப்போதே ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யலாம் என ஆலோசித்து வருகிறாராம். பாஜகவின் தலைவிதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இதை இனிமேல் யார் நினைத்தாலும் மாற்ற முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல்: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மொத்தம் 28 கட்சிகள் இணைந்து இந்த இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் இடம் பெற்றிருந்தார். இருப்பினும், தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அவர் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகினார். இதற்கிடையே சமீபத்தில் அவர் இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்தும் ஆதரவு தரத் தயாராக உள்ளதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications