பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.. 12 பக்க தீர்ப்பில் சொன்ன அலகாபாத் உயர்நீதிமன்றம்
டெல்லி: இந்தியக் கலாச்சாரத்தில் ஒருங்கிணைந்த அம்சமாக பசுக்கள் இருப்பதால் அவற்றுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கி, பசுவை தேசிய விலங்காக அறிவி்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநில அரசு செயல்படுத்தி வரும் பசுவதைச் சட்டத்தின் கீழ் சம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவித் என்பவர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜாவித் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
பசு மாட்டின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மர்ம நபர்கள்.. மதுரையில் கொடுமை
ஜாமீன் மனு தள்ளுபடி
அந்த மனு நீதிபதி சேகர் யாதவ் அமர்வில் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜாவித்தின் ஜாமீன் மனுவை நீதிபதி சேகர் யாதவ் நிராகரித்தார். மேலும், இது தொடர்பாக 12 பக்க உத்தரவு பிறப்பித்தார். தனது தீர்ப்பில் நீதிபதி கூறுகையில், இந்தியாவின் புராதான வேதங்கள், மகாபாரதம் ஆகியவற்றில் பசு மிகவும் முக்கியமானது என்பதும், இந்தியக் கலாச்சாரத்தில் ஒருங்கிணைந்த பகுதியாக பசு இருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போதுள்ள சூழல்களைப் பார்க்கும் போது, பசுவை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். பசு இந்தியாவின் கலாச்சாரம் என்பதால் அதை ஒரு மதத்தோடு மட்டும் பொருத்தி பார்க்க கூடாது. பசுவை காப்பாற்றுவது நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் கடமை.
நாட்டு கலாச்சாரம்
பசுப் பாதுகாப்பு என்பதை இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக கொண்டு வர வேண்டும். நாட்டின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகள் பலவீனமடைந்துவிட்டால் நாடு பலவீனமடையும். வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த நபர்கள் வாழக்கூடிய ஒரே நாடு இந்தியா. ஆனால் அவர்கள் அனைவரும் தேசத்தைப் பற்றி ஒரே மாதிரியாக தேசப்பற்றுடன் பார்க்கிறார்கள். கலாச்சாரத்தை மதிக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவை ஒன்றிணைத்து அதன் நம்பிக்கையை வலுப்படுத்த ஒரு படி முன்னேறும் போது, சில மக்கள் குறிப்பிட்ட மதத்தவர்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டு நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள். ஜாவித்தும் அப்படியான ஒரு நபர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பசுவிற்கு தீங்கு செய்யக் கூடாது
பசுவுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கும் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும், பசுவுக்கு தீங்கும், கொடுமையும் செய்வோரை கடுமையாக தண்டிக்கும் பிரிவுகளைச் சேர்க்க வேண்டும். வாழும் உரிமை என்பது கொல்வதற்கான உரிமையைவிட மேலானது என்பதால் மாட்டிறைச்சி உண்பதை ஒருபோதும் அடிப்படை உரிமையாக எடுக்க முடியாது. மனுதாரர் செய்த குற்றம் முதல்முறையும் அல்ல. இதற்கு முன்பும் பசுவதை செய்து சமூகத்தின் ஒற்றுமையைக் குலைத்துள்ளார் இவர். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கினால், மீண்டும் வெளியேவந்து அதே குற்றத்தைச் செய்வார்.
முகலாயர்கள் பசு வதை தடுப்பு
பசுவின் முக்கியத்துவம் குறித்து இந்துக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முகலாய ஆட்சியாளர்களும் புரிந்து வைத்திருந்தனர். முகலாய பேரரசர்கள் பாபர், ஹுமாயூன், அக்பர் போன்றோர் தங்களின் பண்டிகைகளில் பசுவதை செய்வதை தடை செய்தனர். மைசூர் மாகாணத்தை ஆண்ட ஹைதர் அலியும் பசுவதை செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தார். இந்துக்கள் நம்பிக்கையை இவர்கள் மதித்தார்கள் என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள்.
பசுவை பாதுகாப்பது உரிமை
மாட்டிறைச்சி உண்பவர்கள் அதை அடிப்படை உரிமை என்கிறார்கள். ஆனால் பசுவை வணங்குபவர்கள், அதைச் சார்ந்துள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கும் இந்த உரிமை பொருந்தும்தானே. அதைப் பற்றி கவனம் வைக்க வேண்டும். நாடு முழுவதும் பசு பாதுகாப்பு மையங்கள் கவலைக்கிடமாக இருப்பதை கவனித்து, சரி செய்ய வேண்டும். பசுக்களை பாதுகாப்பது குறித்துப் பேசியவர்கள், இன்று பசு பாதுகாப்பை மறந்து விட்டார்கள். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.