கேதார்நாத், பத்ரிநாத்தில் பிரதமர் மோடி வழிபாடு- நாளை மறுநாள் தீபாவளியை முன்னிட்டு அயோத்தி பயணம்!
டெல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ந் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி செல்கிறார். அங்கு நடைபெறும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றப்படும் தீப உற்சவ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: தீபாவளியையொட்டி வரும் 23-ந் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். மாலை 5 மணியளவில் பகவான் ஸ்ரீராம்லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து பிரதமர் வழிபடுகிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரத்தை அவர் ஆய்வு செய்கிறார்.
அயோத்தியில் மாலை 5.45 மணியளவில் பகவான் ஸ்ரீராமருக்கு ராஜ்யாபிஷேகத்தை பிரதமர் மேற்கொள்கிறார். 6.30 மணியளவில் சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தியை பார்வையிடுகிறார். பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தையம் அவர் தொடங்கிவைக்கிறார்.
இந்த ஆண்டு தீப உற்சவத்தின் 6-வது பதிப்பு நடைபெறுகிறது. முதல் முதலாக பிரதமர் இதில் நேரடியாக கலந்து கொள்கிறார். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் இந்த நிகழ்ச்சியில் ஏற்றப்படும். தீப உற்சவத்தின் போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு நடன வடிவிலான 11 ராம்லீலா மற்றும் 5 அனிமேஷன் வடிவிலான அலங்கார வாகனங்கள் இடம்பெறும். சரயு நதியில் கரைகளில் பிரம்மாண்டமான இசை லேசர் காட்சிகளுடன் முப்பரிமாண ஹோலோ கிராபிக்ஸ் காட்சிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் பயணம் மேற்கொண்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ3,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக உத்தரகாண்ட் சென்றுள்ளார் பிரதமர் மோடி. இதன் ஒருபகுதியாக கேதார்நாத் ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். ஆதி சங்கரச்சாரியார் நினைவிடத்திலும் வழிபட்டார் பிரதமர் மோடி. 2013-ம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது ஆசி சங்கராச்சாரியார் நினைவிடம் பெரும் சேதமடைந்தது. பின்னர் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. கேதார்நாத்தில் ரோப் கார் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பத்ரிநாத் கோவிலுக்கும் சென்று பிரதமர் மோடி வழிபட்டார்.