யானைகள் வழித்தடம்- அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்- தமிழக அரசு மீது உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு
டெல்லி: நீலகிரியில் யானைகள் வழித்தடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத நீலகிரி மாவட்ட ஆட்சியர், தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற கடந்த 2011ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ரிசார்ட் உரிமையாளர்கள், நில உரிமையாளர்கள் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இடைக்கால தடை பெற்றனர்

ஆனால், கடந்த 14-10-2020ல் உச்சநீதிமன்றம் அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்ததோடு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. மேலும் யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களில் அகற்ற நீலகிரி ஆட்சியருக்கு உத்தரவிட்டது
ஆனால் உத்தரவிட்டு, ஒரு ஆண்டு காலமாகியும் யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை, இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மனுதாரரான வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
அதன் பின்னரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, தமிழக அரசு, வனத்துறை செயலாளர் ஆகியோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அண்மையில் கோவை மலை அடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி யானைகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், , நீலகிரி பகுதியில் யானைகளின் வழித்தடம் மற்றும் அவற்றின் வாழ்விடத்தை கண்டறியவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி பழைய நிலைக்கே கொண்டு வரவும் சர்வதேச அளவிலான நிபுணர்கள் மற்றும் உலக வனவிலங்கு நிதியம் ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஆய்வை மேற்கொள்ள இருப்பதாகவும், அந்த அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications