மணிப்பூர் பயங்கரம்! "எதிர்க்கட்சிகள் அக்கறை காட்டவில்லை!" சொல்பவர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
டெல்லி: நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சித்துள்ளார்.
கடந்த 79 நாட்களுக்கு மேலா ஒட்டுமொத்த மணிப்பூர் மாநிலமும் பற்றி எரிந்து வருகிறது. இதன் காரணமாக அங்குக் கடந்த சில மாதங்களாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த மாநில நிர்வாகமும் முடங்கியுள்ளது.

மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களுக்கு நடுவே ஏற்பட்டுள்ள மோதலே இதற்குக் காரணமாகும். அங்கு வன்முறை தொடராமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு, இணையச் சேவை முடக்கப்பட்டது. இருப்பினும், அவை எந்தவொரு பலனையும் தரவில்லை.
என்ன பிரச்சினை: மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், அங்குப் பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி இன மக்கள் பழங்குடியினர் பிரிவில் சேர்த்தால் அது தங்களது உரிமையைப் பாதிக்கும் என்று குக்கி இன மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் அங்கே இரு பிரிவுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கே துணை ராணுவப்படை, போலீசார் எனப் பலரும் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல அங்குப் பல வாரங்களாக இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வன்முறை குறைந்ததாகத் தெரியவில்லை. கொலை, கொள்ளை. பலாத்காரம், வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
பயங்கரம்: இதற்கிடையே இரு நாட்களுக்கு முன்பு ஒரு ஷாக் வீடியோ இணையத்தில் பரவியது. அதாவது அங்கே குக்கி இன பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து வந்த கும்பல் அவர்களைக் கூட்டுப் பலாத்காரமும் செய்துள்ளது. இந்த வீடியோ அனைவரையும் அதிர வைத்துள்ளது. நெஞ்சை உலுக்கும் இந்த வீடியோ வெளியான பிறகு தான், பிரதமர் மோடி முதல்முறையாக மணிப்பூர் வன்முறை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. முதல் நாளான நேற்று கூட இதன் காரணமாகவே நாடாளுமன்றம் முற்றிலுமாக முடங்கியது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமளி தொடரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜ்நாத் சிங்: மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "மணிப்பூரில் நடந்து வரும் சம்பவங்கள் நிச்சயம் மிகவும் தீவிரமானது தான்.. அங்கே இருக்கும் நிலைமையைப் புரிந்து கொண்டு தான், மணிப்பூரில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது என்று பிரதமரே கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நிச்சயமாக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.. மணிப்பூரில் இப்போது நடக்கும் சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்திலும் கூட நாடாளுமன்றத்திலேயே மீண்டும் சொல்கிறேன்... மணிப்பூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் தான்..
ஆனால் இங்கே ஒரு சில அரசியல் கட்சிகள் தேவையில்லாமல் பிரச்சினை செய்கிறது. ஆனால், மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியாத ஒரு சூழ்நிலையை இங்குள்ள அரசியல் கட்சிகள் உருவாக்க முயல்கின்றன.. மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications