பரபரக்கும் டெல்லி அரசியல் களம்.. ஆம் ஆத்மி அமைச்சர் திடீர் ராஜினாமா! ஊழலுக்கு எதிராக முழக்கம்!
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில், ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரும், டெல்லி அமைச்சருமான ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
டெல்லி ஆம் ஆத்மி அரசு தற்போது கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. மணிஷ் சிசோடியா உள்ளிட்ட இரண்டு அமைச்சர்களுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தற்போது சிறையில் இருக்கிறார். அவர் இன்னும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பல வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும், சிறையிலிருந்தே அவர் அரசை நடத்துவார் என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

இன்னும் 9 நாட்களில் முதற்கட்ட லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், இருக்கும் தலைவர்களை கொண்டு கட்சியை முன்னெடுத்து தேர்தல் வேலைகளைச் செய்ய நிர்வாகிகள் திட்டமிட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் பதவி விலகியுள்ளார். அமைச்சர் பொறுப்பிலிருந்து மட்டுமல்லாது, ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.
இது டெல்லி அரசியலில் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. "ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி எடுத்த வீரியமான நடவடிக்கையை பார்த்துதான் நான் இந்த கட்சியில் சேர்ந்தேன். இன்று கட்சி ஊழலில் சிக்கியிருக்கிறது. எனவேதான் நான் விலகுகிறேன். கட்சியில் தலைமை பொறுப்பை வழங்குவதில் பாரபட்சமான நடைமுறை பின்பற்றப்படுகிறது.
கட்சியில் தலித் எம்எல்ஏ, கவுன்சிலர் கிடையாது. தலித்துகளை தலைமை பொறுப்புக்கு கொண்டு வரப்படுவதில்லை. பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை நான் பின்பற்றுகிறேன். தலித்துகளுக்காக உழைக்க முடியாவிட்டால் கட்சியில் இருப்பதில் அர்த்தமில்லை" என்று ராஜ்குமார் விளக்கமளித்துள்ளார். பழங்குடி சமூகத்தை சேர்ந்த இவர் டெல்லியின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.
இவரது ராஜினாமா குறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சௌரப் பரத்வாஜ், பாஜகவின் அழுத்தத்தால்தான் ராஜ்குமார் கட்சியிலிருந்தும், அமைச்சர் பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளார் என்று கூறியுள்ளார்.
முன்னதாக அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தை கெஜ்ரிவால் நாடியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், "கைதுக்கான வலுவான ஆதாரங்களை அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளது. கைது நடவடிக்கையில் எந்த சட்ட விதிகளையும் அது மீறவில்லை. அதேபோல, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் கைது செய்தது சரிதான். மதுபான கொள்கையை உருவாக்கியதில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த வழக்கு ஜாமீன் பற்றியதல்ல, இது ஒட்டுமொத்த கைது நடவடிக்கையையே செல்லாது என்று அறிவிக்க கோரும் வழக்கு. முதல்வராக இருப்பதால் எந்த சலுகையும் வழங்கப்படாது" என்று கூறி கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
இதை எதிர்த்து கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். இந்த வழக்கு இன்று விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் திங்கட்கிழமைதான் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்திருப்பது டெல்லி அரசியலில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications