டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் முடக்கம்.. கிரிப்டோகரன்சியில் ரூ.200 கோடி கேட்கும் ஹேக்கர்கள்?
டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர்களை ஹேக்கர்கள் முடக்கி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதனால், விவிஐபிகள், விஐபிக்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வரை விடுவிக்க ஹேக்கர்கள் ரூ. 200 கோடி கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் மிகப்பெரிய மருத்துவ நிறுவனமாக எய்ம்ஸ் உள்ளது.
விவிஐபிக்கள் முதல் விஐபிகள் வரை நாட்டில் உள்ள பெரும் அரசியல் தலைவர்கள் மத்திய அமைச்சர்கள் என பலரும் உடல் நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது நிறைவு? மருத்துவக் கல்லூரி தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன் பதில்!
எய்ம்ஸ் மருத்துவமனை
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் விவரம் உள்பட மருத்துவமனையின் பல்வேறு தரவுகளும் அடங்கிய மென்பொருளை ஹேக்கர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரில் முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர்கள், நீதிபதிகள் என சுமார் 4 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களும் மருத்துவ சிகிச்சை முறைகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
6 நாட்களாக சர்வர் முடக்கம்
ஹேக்கர்கள் கைவரிசையால் இந்த விவரங்கள் அனைத்து திருடு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் சர்வர்கள் முடக்கம் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிகள் முடங்கியுள்ளன. நோயாளிகளின் பதிவு உள்ளிட்ட அனைத்து பணிகளும் டிஜிட்டல் முறையில் இன்றி நோட்டுக்களில் கைப்பட எழுதி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால், கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 6 நாட்களாக இந்த ஹேக்கர்கள் சர்வரை முடக்கி வைத்துள்ளனர்.
200 கோடி கேட்டதாக..
சர்வர்களை மீட்டெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹேக்கர்கள் கைவரிசையால் கடந்த 6 நாட்களில் மட்டும் 3 முதல் 5 கோடி நோயாளிகள் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சர்வர்களை விடுவிக்க கிரிப்டோகரன்சியாக 200 கோடி கேட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஹேக்கர்களின் பிடியில் இருந்து மீட்க
ஆனால், இதனை டெல்லி போலீசார் மறுத்துள்ளனர். மருத்துவமனையில் உள்ள சர்வர்களை ஹேக்கர்களின் பிடியில் இருந்து மீட்கும் பணியில் எய்ம்ஸ் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. டேட்டாக்களை பேக் அப் எடுத்து வைத்துக்கொள்ளுமாறு நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கம்யூட்டர்களுக்கு ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யபட்டு இருப்பதாகவும் 50 சர்வர்களில் 20 சர்வர்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இருப்பதாகவும் 24 மணி நேரமும் இத்தகைய பணிகள் நடைபெற்று வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.