ஓவர் கான்பிடன்ஸ்.. வியூக நாயகன் அமித்ஷாவுக்கு என்னாச்சு.. தொடர் தோல்விகள்.. பொசுங்கும் பிளான்கள்!!
அமித்ஷாவின் வியூகங்கள் தோல்வியடைய என்ன காரணம்
Recommended Video
டெல்லி: அதீத நம்பிக்கை.. அசைக்க முடியாத நம்பிக்கை... குருட்டு நம்பிக்கை, எல்லாம் எமக்கு தெரியும் என்ற மிதப்பு.. எங்களை தாண்டி யார் வருவார் என்ற மெத்தனம்.. இப்படி ஒட்டுமொத்தமான சர்வாதிகார மனப்பான்மையுடன் பாஜக செயல்பட்டதே டெல்லி தோல்விக்கு ஒரே காரணமாக இருக்க முடியும்.
முற்றிலும் மக்களை மட்டுமே நம்பி தேர்தலை சந்தித்தார் கெஜ்ரிவால். சவால் விடவில்லை... சவடால் பேசவில்லை... யாரையும் மிரட்டவில்லை,.. எதுவுமே செய்யவில்லை. தான் செய்ததை மக்களிடம் சொன்னார் எளிமையான பிரச்சாரம் செய்தார்... மக்கள் பிரச்சனைகளை வேரூன்றி யோசித்தார்.. வாக்குகளை அள்ளி விட்டார்... சிம்பிள்!
மறுபக்கம் பார்த்தால் பாஜக... எத்தனை பேரை, எத்தனை தலைவர்களை பிரச்சாரத்தில் இறக்கி விட்டது அக்கட்சி... அமித் ஷா டெல்லியில் அப்படி ஒரு தீவிரப் பிரச்சாரம் செய்தார்? ஏன் பிரதமர் மோடியே வந்து பிரச்சாரம் செய்தார்... ஆனால் என்ன புண்ணியம் 20 சீட்டைக் கூட எடுக்க முடியாமல் போய் விட்டது.
துடைப்பத்தின் துணையுடன்.. தாமரை வியூகத்தை தகர்த்தெறிந்த கெஜ்ரிவால்.. தேசிய அளவில் மாற்றம் வருமோ!
ஆம் ஆத்மி
கடந்த 2015 தேர்தலில் வென்றதை விட இப்போது அதிக அளவில் வென்றது மட்டுமே பாஜகவின் ஒரே சந்தோஷம். அதை மறுக்க முடியாது. ஆனால் மக்கள் ஆட்சியை ஆம் ஆத்மியிடமே இருக்கட்டும் என்று கூறி விட்டனரே, பாஜகவிடம் தர மறுத்து விட்டனரே.. அதுதான் மிக மிக முக்கியம். பாஜகவை நம்ப மக்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
அதிருப்தி
மிக மிக தீவிரமாக பிரச்சாரம் செய்தது பாஜக, அமித்ஷாவின் வியூகம், அதிகார பலம், பிரதமர் மோடியின் பிரச்சாரம் என எல்லாம் இருந்தும் டெல்லியைப் பிடிக்க முடியவில்லை பாஜகவால். அதற்கு அக்கட்சியிடம் உள்ள சில போக்குகளே முக்கியக் காரணம். குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பான விவகாரங்களில் பாஜக காட்டி வரும் பிடிவாதம் ஒரு காரணம் என்றால் கெஜ்ரிவால் அரசு மீது மக்களுக்கு எந்தவிதமான அதிருப்தியும் இல்லை என்பதுதான் முக்கியமான விஷயம்.
முதல் தோல்வி
டெல்லி நிர்வாகத்தை அத்தனை அழகாக பராமரித்து வருகிறார் கெஜ்ரிவால். அவரது அரசைக் குறை கூற பெரிய அளவில் ஒரு காரணம் கூட இல்லை. தனது கட்டுப்பாட்டுக்குள் என்னவெல்லாம்செய்ய முடியுமோ அதையெல்லாம் அழகாக செய்து வருகிறார் கெஜ்ரிவால். அவருக்கு எதிராக முணுமுணுப்புகள் பெரிதாக இல்லை... இது பாஜகவின் முதல் தோல்வியாகும்.
செயல்பாடுகள்
பாஜக என்றாலே அடக்குமுறை என்ற எண்ணம் மக்கள் மனதில் வந்து விட்டது. டெல்லியில் நடந்த பல போராட்டங்களில் டெல்லி காவல்துறையின் செயல்பாடுகள் மக்களை அதிர வைத்து விட்டது. இப்படிப்பட்ட ஒரு கட்சியிடம் ஆட்சியைக் கொடுத்தால் கெஜ்ரிவால் தலைமையில் நடந்து வரும் நல்ல விஷயங்கள் அப்படியே சீர்குலையும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்து விட்டது. இதுவே கெஜ்ரிவாலை மக்கள் மீண்டும் தேர்வு செய்ய இன்னொரு முக்கியக் காரணம்.
அமித்ஷா வியூகம்
2019-ம் ஆண்டு எம்பி தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இதே பாஜக 50 சதவிகிதத்துக்கும் மேலான வாக்குகள் பெற்று வெற்றியும் பெற்றிருந்தது. ஆனால், சட்டமன்ற தேர்தலுக்கும் மக்கள் ஒரே முறையில் வாக்களிப்பதில்லை என்பதைதான் இந்த தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன. 22 ஆண்டுகள் டெல்லியில் ஆட்சியில் இல்லையென்றாலும் தனக்கான இடத்தையும் வாக்கு சதவீதத்தை பாஜக தன்னகத்தே வைத்து வந்திருக்கிறது... இப்போதுகூட, டெல்லி தேர்தல் பிரசாரத்தில் உள்ளூர் விவகாரங்களை காட்டிலும் தேசிய விவகாரங்களுக்குரான் பாஜக முக்கியத்துவம் தந்தது.. இது கண்டிப்பாக அமித்ஷாவின் வியூகமாகத்தான் இருக்க முடியும்.
அயோத்தி விவகாரம்
பிரதமர், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பிரசாரப் பேரணிகளில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்தும், அயோத்தி விவகாரம் குறித்தும், குடியுரிமை திருத்தச் சட்டம், அதற்கு எதிரான போராட்டங்கள் ஆகியவையே அதிகம் முன்னிறுத்தப்பட்டன. தேசிய அளவிலான பிரச்சனைகளை கொண்டு வந்து டெல்லி மக்களிடம் பேசியது கிஞ்சித்தும் சோபிக்கவில்லை.. தங்களது அடிமட்ட பிரச்சனைகளுக்கும், பாஜக தலைவர்களின் பிரச்சாரத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோலவே நினைத்துவிட்டனர்.
உயர்ந்து நின்றார்
வெகுஜன மக்களிடம் நெருங்கி.. அவர்களின் பிரச்சனைகளை கூர்ந்து கவனித்து.. குடிநீரும், இலவச கரண்ட்டும் என சலுகைகளை கொடுத்து... கைதூக்கி விட்ட நபரே மனசில் உயர்ந்து நின்று விட்டார்! மக்கள் பிரச்சனைகளை அவர்களின் மனநிலையில் இருந்து உற்றுநோக்க அமித்ஷாவும், பாஜகவும் தவறிவிட்டது என்றுதான் தோன்றுகிறது. இதெல்லாம் போக, ஷாகின் பாக் போராட்டங்களை காங்கிரஸும் ஆம் ஆத்மியும் ஊக்குவித்து வருவதாக பாஜகவின் குற்றச்சாட்டு அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பமாக காட்டி கொடுத்துவிட்டது!!
கமல்நாத்
இப்படித்தான் 2018ல் அமித்ஷாவின் வியூகங்கள் பெரும் அடி வாங்கின. ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அசோக் கெலாட் தலைமையில் அபார வெற்றி பெற்றது. 100 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக ஆட்சியை இழந்தது. அதேபோல மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் அதிரடி வெற்றியைப் பெற்றுத காங்கிரஸ், பாஜக ஆட்சியை இழந்தது. ஹரியானாவிலும் இதே கதிதான் பாஜகவுக்கு ஏற்பட்டது. அங்கும் ஆட்சியை இழந்தது. ஜார்க்கண்ட்டிலும் சிபு சோரனிடம் பாஜக ஆட்சியைப் பறி கொடுத்து வெளியேறியது.