டெல்லி: தெலுங்கர் ஓட்டுகளை அறுவடை செய்ய சந்திரபாபு நாயுடுவை களமிறக்கிய பாஜக- கெஜ்ரிவால் மீது சாடல்!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலின் இறுதி கட்ட பிரசாரத்தில் தெலுங்கு மொழி பேசும் தெலுங்கர்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை களமிறக்கி இருக்கிறது பாஜக. டெல்லியில் தெலுங்கர்கள் கணிசமாக வாக்காளர்களாக உள்ள பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம் செய்தார்.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. மொத்தம் 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

டெல்லியில் தமிழர்கள், தெலுங்கர்கள் உள்ளிட்ட பிற மாநிலத்தவரும் கணிசமான வாக்காளர்களாக உள்ளனர். ஆனாலும் டெல்லி தேர்தல் களத்தில் தென்னிந்திய மாநிலத்தவருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பது இல்லை.
இந்த தேர்தல் களத்திலும் அதே நிலைமைதான் உள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தெலுங்கு மொழி பேசும் தெலுங்கர் வாக்காளர்கள் கணிசமாக உள்ள பகுதிகளில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று பிரசாரம் செய்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: இந்தியாவில் சாமானியர்கள் என்பவர்கள் நடுத்தர வர்க்கத்தினர்தான். அத்தகைய நடுத்தரவர்க்கத்தினரும் முக்கியம்தான் என்பதை பட்ஜெட் மூலம் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் ரூ12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளித்திருப்பதன் பின்னணியும் அதுதான். ஏழைகளும் பணக்காரர்களும் ஒன்றுதான் என்பதே மத்திய அரசின் கொள்கை. வறுமையை ஒழிப்போம் என்பதையே மத்திய பட்ஜெட்டில் தெரிவித்துள்ளனர்.
சித்தாந்தம் என்பதற்கும் வளர்ச்சிக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இடதுசாரிகளுடன் இணைந்து நின்றால் தனிமைப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்படுவீர்கள்.. நிரந்தரமாக இடப்பக்கமாக புறந்தள்ளப்பட்டுவிடுவீர்கள். சரியான அரசியல் மூலம் சரியான வளர்ச்சி முன்னெடுக்கப்பட வேண்டும். வளர்ச்சியில்தான் ஒரு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு முன்வைத்திருப்பது பெயிலியர் மாடல். டெல்லி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு எந்த ஒரு வளர்ச்சியையும் முன்னெடுக்கவில்லை. ஆனால் மக்கள் வளர்ச்சித் திட்டங்களைப் பற்றி பேச முடியாது. உலகத்திலேயே டெல்லிதான் மிக மோசமாக மாசடைந்த தலைநகர். இதற்கு யார்தான் பொறுப்பேற்பது? ஒவ்வொரு நாளும் டெல்லி வாழ் மக்கள் ஏழைகளாகிக் கொண்டிருக்கின்றனர். ஆகையால்தான் கெஜ்ரிவால் மாடல் ஏற்க முடியாது என்கிறோம். டெல்லிக்கு தேவை மோடியின் மாடல்தான். டெல்லியில் யமுனை மாசடைந்திருப்பதை மோடி அரசாங்கம்தான் மீட்டெடுக்க முடியும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.












Click it and Unblock the Notifications