"டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா கொடூரம்!" டைம் கேட்க போன பெண்.. ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் 2012ல் அரங்கேறியது போல மீண்டும் ஒரு கொடூரம் நடந்துள்ளது. ஸ்லீப்பர் பேருந்தில் பெண் ஒருவர் கடத்தப்பட்ட கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார். இருவரைக் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கப் பல்வேறு சட்டங்கள் உள்ள போதிலும், இந்தக் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. மீண்டும் அப்படியொரு கொடூரம் தான் டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லியில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்லீப்பர் பேருந்தில் ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் என இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.

பலாத்காரம்
டெல்லியின் ராணி பாக் பகுதியில் திங்கள்கிழமை நடந்த இச்சம்பவத்தில், இருவர் சேர்ந்து தன்னை வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண் பிதாம்புரா குடிசைப்பகுதி வசித்து வருகிறார். மங்கோல்புரி உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வரும் அவர், திருமணமாகி மூன்று குழந்தைகள் கொண்டவர்.
மே 11ம் தேதி இரவு, வேலை முடித்துத் திரும்பிய அந்தப் பெண், சரஸ்வதி விஹார் பேருந்து நிறுத்தத்தில் அருகே காத்திருந்தார். அப்போது அங்கு ஒரு பேருந்து நின்று கொண்டு இருந்தது. பேருந்தின் கதவருகே இருந்த நபரிடம் டைம் கேட்கச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணை அங்கிருந்த நபர் உள்ளே பலவந்தமாகப் பிடித்து இழுத்தார். பின், குற்றவாளிகள் நங்லோய் நோக்கி பேருந்தை ஓட்டிச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் காவல்துறை கூறுகிறது.
கைது
மருத்துவப் பரிசோதனைக்குப் பின், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக டெல்லி காவல்துறை கூறியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி பாஜக தலைமையிலான அரசைக் கடுமையாகச் சாடியது. இது நிர்பயா வழக்கின் மறுவடிவம் எனவும், தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு சீர்குலைந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியது.
கண்டனம்
இது தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது தளத்தில், "டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்! பள்ளி செல்லும் பெண்களுக்கும், பேருந்துகளிலும் பாதுகாப்பு இல்லை!" என்றார். ஆம் ஆத்மி தலைவர் சௌரப் பரத்வாஜ் X பதிவில், "பெரும் அவமானம் – மீண்டும் நிர்பயா சம்பவம். நேரம் கேட்கச் சென்ற 30 வயது பெண் இரவில் பேருந்தில் கடத்தப்பட்டு, பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்..." எனக் கண்டனம் தெரிவித்தார்.
நிர்பயா சம்பவம்
அரசியல் கட்சியினர் பலரும் இந்தச் சம்பவத்தை 2012ல் அரங்கேறிய நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தோடு பதிவிட்டு வருகிறார்கள். 2012ல் தெற்கு டெல்லியில் ஓடும் பேருந்தில் டிசம்பர் 16-17 இரவு பெண் ஒருவர் ஆறு பேரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தக் கொடூரத்திற்குப் பிறகு சாலையில் தூக்கி வீசப்பட்ட 23 வயது மருத்துவ மாணவிக்குத் தீவிரச் சிகிச்சை தரப்பட்டது. அவர் உயர் சிகிச்சைக்காகச் சிங்கப்பூருக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், டிசம்பர் 29ம் தேதி சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனில்லாமல் அந்த மாணவி உயிரிழந்தார்.
நிர்பயா சம்பவம் அப்போது நாடு முழுக்க அதிர வைத்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இதைக் கண்டித்து போராட்டங்கள் நடந்தது. அதன் பிறகு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இந்தச் சூழலில் தான் மீண்டும் ஒரு கொடூரம் டெல்லியில் ஓடும் பேருந்தில் அரங்கேறியுள்ளது.












Click it and Unblock the Notifications