இது வெறும் தாக்குதல் இல்லை.. கெஜ்ரிவாலை கொல்ல நடந்த முயற்சி! ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக முயற்சித்து வருகிறது என ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர். டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டின் மீது பாஜகவினர் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்துள்ளார்.
நாடு முழுவதும் பெரும் விவாத பொருளாக ‛தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் மாறியுள்ளது. 1990 காலக்கட்டத்தில் காஷ்மீர் பண்டித்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறியதை அடிப்படையாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் இந்த படத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. உண்மையை படமாக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்
தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக சட்டசபை மற்றும் பொதுவெளியில் விமர்சித்து இருந்தார். அவர் கூறுகையில், ‛‛காஷ்மீர் பண்டித்களுக்கு மறுவாழ்வு தான் வேண்டுமே தவிர திரைப்படம் இல்லை. என்னை பொறுத்தவரை இந்த திரைப்படம் முக்கியமில்லை. இது பாஜகவுக்கு முக்கியமானதாக இருக்கலாம். மேலும் படத்தை யூடியூப்பில் வெளியிட சொல்லுங்கள். அனைவரும் பார்க்கட்டும். திரைப்படத்திற்கு வரி விலக்கு எதற்கு. பாஜக தொண்டர்கள் செம்மறி ஆடுகளை போல நடந்து கொள்வதை நிறுத்துங்கள். பாஜகவின் ஆம் ஆத்மி கட்சிக்கு வாருங்கள். உங்களைப் பயன்படுத்தி தேசத்தைக் கட்டியெழுப்புவோம்" என்றார்.

பாஜக ஆர்ப்பாட்டம்
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.இந்நிலையில் எம்பியும், பாஜக இளைஞரணி தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா தலைமையில் டெல்லியில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்துக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

வீடு சேதம்
இந்த வேளையில் சிலர் தடுப்புகளை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டு சுவற்றில் பெயிண்டை வீசினர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட சிலவற்றை அவர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மொத்தம் 70 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையை ஆம் ஆத்மி கடுமையாக கண்டித்துள்ளது.

கெஜ்ரிவாலை கொல்ல முயற்சி
மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக கொல்ல துடிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛இன்று டெல்லி போலீசார் முன்னிலையில் அவர்களுடன் சேர்ந்து பாஜக குண்டர்கள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டுக்கு வந்து சிசிடிவி கேமராக்களை உடைத்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்க நன்கு திட்டமிடப்பட்ட சதி என்பதை இது உணர்த்துகிறது. பாஜகவால் தேர்தலில் தோற்கடிக்க முடியாததால் அவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல நினைக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல பாஜக விரும்புகிறது'' என்றார்.

சவுரப் பரத்வாஜ்
இதுபற்றி ஆம் ஆத்மி சவுரப் பரத்வாஜ் ‛‛ ஏதாவது காரணம் கூறி அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக முயற்சிக்கிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதை கண்டு மத்திய பாஜக அரசு பயந்துள்ளது. இதனால் டெல்லி போலீசாருடன் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications