டெல்லியில எப்படி இப்படி பறிகொடுத்தோம்.. ஆய்வு செய்ய 5 பேர் குழு அமைத்தது காங்கிரஸ்!
டெல்லி: டெல்லியில் 7 லோக்சபா தொகுதிகளும் பறிபோனதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கான 17வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதற்கான முடிவுகள் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது.
பாஜக தனிப்பெரும்பான்மை
பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது பாஜக. தென் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை.
பறிபோன கோட்டைகள்
ஆனால் வட மாநிலங்களில் பாஜக பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கோட்டை என கூறப்பட்ட பல தொகுதிகளையும் பாஜகவிடம் பறிகொடுத்துள்ளது காங்கிரஸ்.
18 மாநிலங்களில் பூஜ்ஜியம்
18 மாநிலங்களில் ஒரு இடத்தைக்கூட காங்கிரஸால் கைப்பற்ற முடியவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லியிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை கூட வெல்ல முடியவில்லை. 7 தொகுதிகளையும் பாஜகவிடம் இழந்துள்ளது.
5 பேர் கமிட்டி
இந்நிலையில் டெல்லியில் 7 தொகுதிகளையும் இழந்தது குறித்து ஆராய 5 பேர் கொண்ட ஒரு கமிட்டியை அம்மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் அமைத்துள்ளார்.
ஷீலா தீட்சித் உத்தரவு
இந்தக் கமிட்டியில் டெல்லி முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் ஏ.கே.வாலியா, யோகநாத் சாஸ்திரி, செய்தி தொடர்பாளர் பவான் கேரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் கமிட்டி அடுத்த 10 நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஷீலா தீட்சித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மனோஜ் திவாரியிடம் தோல்வி
டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரான ஷீலா தீட்சித், வடகிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி 3.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.