திக் திக் திகிலில் கெஜ்ரிவால்! உள்ளேவா? வெளியேவா? அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் - ஜூன் 1-ல் விசாரணை!
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் முடிவடையும் ஜூன் 1-ல் இம்மனு மீது விசாரணை நடைபெறுகிறது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா சிறையில் இருக்கிறார். தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள் கவிதாவும் சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினர். தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
இடைக்கால ஜாமீன் காலம் முடிவடைந்த உடன், ஜூன் 2-ந் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்து மீண்டும் சிறைக்குப் போக வேண்டும் என்பது ஜாமீன் உத்தரவு. அதேநேரத்தில் தமக்கான இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்கனவே அவசரமாக விசாரிக்க மறுத்திருந்தனர்.
இந்த நிலையில் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை அவசர வழக்காகப் பட்டியலிட உச்சநீதிமன்றப் பதிவாளர் மறுத்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் காலம் இன்னும் 2 நாட்கள்தான். இதன் பின்னரும் ஜாமீன் நீட்டிப்பு கிடைக்காமல் போனால் சிறைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் உருவானது.
இதனிடையே டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தமக்கு ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் இந்த மனு மீதான விசாரணை ஜூன் 1-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம்தான் கெஜ்ரிவால் உள்ளேவா? வெளியேவா? என தெரியவரும்.












Click it and Unblock the Notifications