நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க முடியாது.. டெல்லி கோர்ட் அதிரடி
டெல்லி: கருணை மனுவை காரணம் காட்டி தண்டனையை நிறைவேற்ற தடை கோரிய நிர்பயா வழக்கு குற்றவாளிகள் அக்சய் சிங், பவன் குப்தா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் துணை மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை நாளை அதாவது மார்ச் 3ம் த் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கிலிட வேண்டும் என்று கடந்த 17ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் இதுவரை முகேஷ் குமார் சிங், வினய் குமார் சர்மா மற்றும் அக்ஷய் குமார் ஆகிய மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்கள் ஏற்கனவே ஜனாதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் அக்சய் குமாரின் மனு மட்டும் முறையாக இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் அக்சய் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி உள்ளார்.
இதேபோல் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரியும், மார்ச் 3 ம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் குற்றவாளி பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இது ஒருபுறம் எனில் அக்சய் குமார் மற்றும் பவன் குமார் ஆகியோர் விசாரணை நீதிமன்றத்தில் கருணை மனு அனுப்பி உள்ள காரணத்தை கூறி மரண தண்டனையை நிறைவேற்ற தடைவிதிக்ககூடாது என டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்ற நீதிபதி தர்மேந்திர ராணா, கருணை மனுவை காரணம் காட்டி மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications