அன்று ஜெ.- சொத்து குவிப்பு வழக்கு: ஹரியானா மாஜி முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் 4 சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன் ஓம் பிரகாஷ் சவுதாலா. இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரான ஓம் பிரகாஷ் சவுதாலா, 1996-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை ஹரியானா முதல்வராக பதவி வகித்தார். அப்பதவி காலத்தின் போது வருமானத்துக்கு அதிகமாக ரூ6.10 கோடி சொத்து குவித்தார் என்பது வழக்கு.
சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டே குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இவ்வழக்கில் அண்மையில் ஓம் பிரகாஷ் சவுதாலாவை குற்றவாளி என டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து ஓம் பிரகாஷ் சவுதாலா உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு சொந்தமான 4 சொத்துகளை பறிமுதல் செய்யவும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக ஓம் பிரகாஷ் சவுதாலாவின் முதுமையை காரணம் காட்டி அவருக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
2017-ம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருந்தது. ஆனால் ஜெயலலிதா அப்போது காலமாகிவிட்டதால் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி,சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகால சிறை தண்டனையை முழுமையாக அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.