ஹாஸ்பிட்டல் போய்.. சுடுகாட்டில் காத்திருந்தது போய்.. எரியூட்ட விறகுகளுக்காக காத்திருக்கும் சடலங்கள்
டெல்லி: டெல்லியில் உள்ள சுடுகாடுகளில் கொரோனா வைரஸால் பலியாகும் நபர்களை எரியூட்ட கட்டைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு 300 பேர் வரை இறக்கிறார்கள். டெல்லியில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை 350 பேர் கொரோனாவால் பலியாகினர்.
இராப்பகலாக காத்திருக்கும் சடலங்கள்.. சுடுகாடுகளாகும் மைதானங்கள், பூங்காக்கள்!.. கோர பிடியில் டெல்லி!
இவ்வாறு இறப்போரை எரியூட்ட சுடுகாடுகளில் டோக்கன் சிஸ்டம் மூலம் சடலங்களுடன் உறவினர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகரிப்பால் மருத்துவமனைகளில் மட்டுமல்லாது சுடுகாடுகளிலும் சடலங்களை எரியூட்ட மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.
கூடுதல் தகனமேடைகள்
இதனால் கூடுதலாக தகனமேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் உள்ள சாராய் காலே கான் எனும் இடுகாட்டில் ஏராளமான சடலங்களை எரியூட்டப்படுகின்றன. மேலும் சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் புதிய தகனமேடைகள் கட்டப்பட்டு வருகின்றன.
சிறிய அளவு
தற்போது அங்கு வாகன நிறுத்துமிடத்தில் 20 க்கும் மேற்பட்ட தகனமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட தகனமேடைகள் வேறு ஒரு இடத்தில் தயார் செய்யப்படுகிறது. இதுகுறித்து தகனமேடைகளை கட்டும் ஒப்பந்ததாரர் கூறுகையில் புதிதாக அமைக்கும் தகனமேடைகள் தினந்தோறும் கொண்டு வரும் சடலங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் சிறிது அளவுதான் உள்ளது என்றார்.
சடலங்கள்
70 தகனமேடைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. எனினும் எரியூட்ட கட்டைகள் இல்லாத நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக சுடுகாடுகளுக்கு கொண்டு வரப்படும் சடலங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
சடலங்கள் காத்திருப்பு
பாசிம் விஹாரில் உள்ள சுடுகாட்டில் அதிகப்படியான சடலங்கள் காத்திருப்பதால் கடந்த 24 மணி நேரத்தில் 50 கூடுதல் தகனமேடைகள் கட்டப்பட்டுள்ளன. மேற்கொண்டு கட்டுவதற்கு இடம் போதவில்லை. அது போல் நிகாம் போத் காட்டில் முன்பெல்லாம் 20 சடலங்கள்தான் எரியூட்டப்படும். ஆனால் தற்போது தினமும் 50 சடலங்கள் வருகின்றன.
|
தீர்ந்து போன கட்டைகள்
தகனமேடைகள் கிடைத்தும் கட்டைகள் இல்லாததால் உறவினர்கள் சுடுகாட்டில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான கட்டைகளை இருப்பு வைத்திருந்த நிலையில் இவை அனைத்து வெறும் 10 நாட்களிலேயே தீர்ந்து விட்டன. தற்போது கட்டைகளுக்காக காத்திருக்கிறோம் என்றார்.