கொரோனா அடுத்த அலைகள் குழந்தைகளை பாதிக்கும் என்பது ஊகம்: டெல்லி மருத்துவர் பிரவீன்குமார் விளக்கம்
டெல்லி: கொரோனா அடுத்த அலைகள் குழந்தைகளைப் பாதிக்கும் என்பது ஊகம்தான் என்று டெல்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியின் குழந்தை மருத்துவப் பிரிவு இயக்குநர் டாக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளிடையே ஏற்படும் கொரோனா தொற்றின் தாக்கம், அவர்களின் பாதுகாப்பு, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து டெல்லி டாக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ள கருத்துகள்:
மகா., கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது கவலை தருகிறது: 6 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மோடி
குழந்தைகளின் மனநலன் மற்றும் உடல்நலனில் கொரோனா தொற்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஒரு வருடத்திற்கும் மேலாக குழந்தைகள் வீட்டிலேயே அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் பாதிப்பு, பெற்றோருக்கு ஊதியக் குறைப்பு போன்றவற்றால் மன அழுத்தம் அதிகரித்துள்ளது.
குழந்தைகளுக்கான பாதிப்புகள்
வித்தியாசமாக நடந்து கொள்வதன் வாயிலாக உளவியல் ரீதியான பாதிப்பை குழந்தைகள் வெளிப்படுத்தக் கூடும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் நடந்துக் கொள்வார்கள். ஒரு சிலர் திடீரென அமைதியாக இருப்பார்கள், வேறு சிலர் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.
அடுத்த அலைகள் குழந்தைகளை பாதிக்கும்?
கொரோனா வைரஸ் என்பது உருமாறும் தன்மையுடைய புதிய தொற்று நோய். எதிர்கால அலைகள் குழந்தைகளை பாதிக்குமா அல்லது தொற்றின் தீவிரம் அதிகரிக்குமா என்பது அனைத்தும் ஊகங்களே. பெரும்பாலான பெரியவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாலும், தற்போதைய நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி அனுமதிக்கப்படவில்லை என்பதாலும், வருங்கால அலைகள் குழந்தைகளை பாதிக்கும் என்று மக்கள் ஊகத்தின் அடிப்படையில் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி
எதிர்காலத்தில் இந்த தொற்றுநோய் குழந்தைகளிடையே எந்தவகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாத நிலையிலும் அதிலிருந்து குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள் கொரோனா சரியான நடத்தை விதிமுறையை பின்பற்றுவதுடன், வெளியில் சென்று வரும்போது தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமூக நிகழ்வுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் பெரியவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் அபாயம் பெருமளவு குறையும்.
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி
தற்போது கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கருவில் உள்ள குழந்தையும் பிறந்த குழந்தையும் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படும். இவ்வாறு டாக்டர் பிரவீன்குமார் கூறினார்.