மகளிருக்கு மாதம் ரூ.2,500.. தீபாவளி, ஹோலிக்கு இலவச சிலிண்டர்.. டெல்லி தேர்தலில் பாஜகவின் வாக்குறுதி!
டெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதிகளை மத்திய அமைச்சர் ஜேபி நட்டா வெளியிட்டுள்ளார். அதில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதோடு, தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைகளுக்கு இலவச சிலிண்டர் அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பதவிக்காலம் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், பிப்.5ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் பதிவான வாக்குகள் பிப்.8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிடுவதால், மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

அதேபோல் இம்முறை டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜக கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்கான பிரச்சாரமும் ஒருபக்கம் நடந்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் ஜேபி நட்டா டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் அளிக்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை வாக்குறுதியும் இடம்பெற்றுள்ளது.
டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு மாதமும் மகளிருக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைத்த பின் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்றும் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். அதேபோல் 2021ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி தரப்பில் ரூ.1,000 வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தனர்.
அந்த வாக்குறுதி ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் பாஜக ஆட்சியமைத்தால் கருவுற்ற பெண்களுக்கு ரூ.21,000 மற்றும் 6 ஊட்டச்சத்து தொகுப்பு அளிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2வது குழந்தைக்கு ரூ.6,000 அளிக்கப்படும்.
தொடர்ந்து, பாஜக அரசு அமையும் போது சிலிண்டர்களுக்கு ரூ.500 மானியம் அளிக்கப்படும். தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைகளுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லியில் மருத்துவக் காப்பீடு திட்டம் ரூ.5 லட்சத்தில் செயல்படுத்தி வரும் நிலையில், பாஜக ஆட்சியில் கூடுதலாக ரூ.5 லட்சம் அளிக்கப்பட்டு, மருத்துவக் காப்பீடு ரூ.10 லட்சம் காப்பீடு அளிக்கப்படும்.
அதேபோல் பென்சன் திட்டத்தின் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ரூ.2 ஆயிரம், பாஜக ஆட்சியில் ரூ.2,500ஆக உயர்த்தப்படும். 70 வயதிற்கு மேலாகும் வாக்காளர்களுக்கு ரூ.3 ஆயிரமாக அளிக்கப்படும். அதேபோல் கைம்பெண் மற்றும் ஆதரவற்றோருக்கு அளிக்கப்படும் உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
மேலும், அடல் கேண்டீன் திட்டத்தின் மூலமாக ரூ.5க்கு சாப்பாடு வழங்கும் திட்டம் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கப்படும். அதேபோல் ஆம் ஆத்மி ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications