கடுமையான போட்டி தான்.. ஆனாலும் பாஜகவுக்கு வாய்ப்பு – டெல்லி தேர்தல் மேட்ரைஸ் சூசகம்
டெல்லி: இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தேர்தல் திருவிழா உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. சுமார் 1.5 கோடி வாக்காளர்கள் தங்களை எந்தக் கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்யவுள்ளனர். தலைநகர் என்பதால் இந்த தேர்தல் தேசியளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் மேட்ரைஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக, ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இருப்பினும் பாஜகவுக்கு சற்று வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ளனர்.
தலைநகர் டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 3 முறை ஆட்சியை பிடித்து காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு சவால் விடுத்தது. அதன்படி டெல்லியில் கடந்த 2014, 2015, 2020 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கிறது. அதிலும் 2015 மற்றும் 2020 சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி தனிப்பெருபான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கு இன்று (5.2.2025) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்காளர்கள் காலை 7 மணி முதல் நீண்ட வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். மாலை 5 மணி நிலவரப்படி டெல்லியில் 57.7 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
தொடர்ந்து வருகிற பிப்ரவரி 8 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டசபை தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மை கிடைத்து ஆட்சியை பிடிக்க முடியும். இந்த தேர்தலை பொறுத்தவரை ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மாலை 6.30 மணியில் இருந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எனப்படும் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
மேட்ரைஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஆம் ஆத்மி 32-37 தொகுதிகளிலும் பாஜக 35-40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் 0-1 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
வாக்கு சதவீதம் அடிப்படையில் பாஜக 46 சதவீதம், ஆம் ஆத்மி 44 சதவீதம், காங்கிரஸ் 8 சதவீதம் வாக்குகளை பெற வாய்ப்புள்ளது என்று மேட்ரைஸ் நிறுவனம் கூறியுள்ளது. பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டி நிலவினாலும் இதில் பாஜகவுக்கு சற்று வாய்ப்பு அதிகம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications