டெல்லி எக்ஸிட் போல்: “திடீர் டர்ன்”.. ஆம் ஆத்மி பக்கம் காற்று.. திரும்பி பார்க்க வைத்த 3 கணிப்புகள்!
டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்த நிலையில், எக்ஸிட் போல் கணிப்புகள் வெளியாகின. பெரும்பாலான கணிப்புகள் பாஜக ஆட்சி அமைக்கும் என்கின்றன. அதேசமயம், 3 நிறுவனங்களின் கணிப்புகள், ஆம் ஆத்மி வெல்லும் என்கின்றன.
டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவிய டெல்லியில் இன்று பதிவான வாக்குகள் வரும் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. டெல்லியில் ஆட்சி அமைக்க டெல்லியில் 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மும்முனை போட்டியில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கட்சி எது என்பது இன்னும் 2 நாட்களில் தெரிந்துவிடும்.

டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதியிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு 6 மணிக்கு நிறைவு பெற்றது. அதைத்தொடர்ந்து, 6.30 மணி முதல் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் (எக்ஸிட் போல் முடிவுகள்) வெளியாகத் தொடங்கின.
எக்ஸிட் போல் முடிவுகள்
P-Marq, Matrize, CNN, People's pulse, Chanakya Strategy மற்றும் JVC Poll உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகள் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என்று கணித்துள்ளன.
பி-மார்க் எக்ஸிட் போல், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கணித்துள்ளது. பாஜகவுக்கு 39-49 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 21-31 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 0-1 இடங்களும் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
திசையை மாற்றிய 3 கணிப்புகள்
அதேசமயம், 3 எக்ஸிட் போல்கள், டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற கணிப்பை வெளியிட்டுள்ளன. மைண்ட் பிரிங்க், WeePreside மற்றும் ICPL ஆகிய மூன்று கருத்துக் கணிப்புகள், 2025 டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முழுமையான வெற்றியைப் பெறும் என்று கணித்துள்ளன.
மைண்ட் பிரிங்க், ஆம் ஆத்மி கட்சி, மொத்தமாக 44 - 49 இடங்களைப் பிடிக்கும் என்று கணித்துள்ளது. வீ பிரசிட், ஆம் ஆத்மி கட்சி 46 - 52 இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எக்ஸிட் போல் வெளியிட்டுள்ளது. ஐசிபிஎல், ஆம் ஆத்மி கட்சி 33-38 இடங்களில் வெற்றி பெற்று நூலிழையில் ஆட்சியைக் கைப்பற்றக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள்
முன்னதாக, 2013 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து டெல்லி தேர்தல்களில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், துல்லியமாகவே இருந்துள்ளன. 2013 ஆம் ஆண்டில், தொங்கு சட்டமன்றம் அமையும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் கணித்திருந்தன.
2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் எனக் கணித்தன. ஆனால் அவர்களின் வெற்றியின் அளவை துல்லியமாக கணிக்கத் தவறிவிட்டன, தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டன.
உதாரணமாக, 2015 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சி சராசரியாக 45 இடங்களைக் கைப்பற்றும் எனக் கணித்தன. ஆனால், உண்மையில், ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களைக் கைப்பற்றி க்ளீன் ஸ்வீட் அடித்தது.
2020 சட்டசபை தேர்தலின் போது கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியின் 62 இடங்களின் வெற்றியுடன் நெருக்கமாக ஒத்துப்போனது. பல எக்ஸிட் போல் முடிவுகள், ஆம் ஆத்மி கட்சி 60 இடங்களில் வெல்லும் எனக் கணித்திருந்தன.












Click it and Unblock the Notifications