டெல்லி விவசாயிகள் போராட்டம்: சாலைகளை மூடியது யார் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
விவசாயிகள் எதிர் கொண்டு வரும் பிரச்சனைகளை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
டெல்லி: விவசாயிகள் போராட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரும் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்
விவசாயிகள் எதிர் கொண்டு வரும் பிரச்சனைகளை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் 21ஆவது நாளை எட்டியுள்ளது. பல மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லியை நோக்கி வருவதால் எல்லையில் உள்ள சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் சாலைகளை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடும் குளிரிலும் சமைத்து சாப்பிட்டு விட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போரட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசு விவசாய அமைப்புகளுடன் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது.
வேளாண் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள தயார் என மத்திய அரசு தெரிவித்தும், அச்சட்டங்களை ரத்து செய்தாக வேண்டும் என விடாப்பிடியாக விவசாயிகள் போராட்டத்தை தொடருகின்றனர். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விவசாயிகள் அதிக அளவில் கூடியுள்ளதால் கொரோனா பரவல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகள் போராட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதை தடுத்தது யார்.? சாலைகளை முடியாது யார்.? என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் குழு அமைக்கும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். விவசாயிகள் சங்கங்கள், மத்திய அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பு பிரதிநிதிகளும் அடங்குவர் எனவும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடுமையான குளிரிலும் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்க வேண்டும் என டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் தேசிய அளவில் மிகப்பெரிய போராட்டமாக மாறும் என்று தெரிவித்த நீதிபதிகள், உரிய முறையில் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
விவசாய சங்கங்கள் எதிர்மனுதாரர்களாக இணைய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் விவசாயிகள் போராட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications