உடலுறவுக்கு முன்.. பிறந்த தேதியை எல்லாம் செக் செய்ய முடியாது! மைனர் பலாத்கார வழக்கில் டெல்லி ஐகோர்ட்
டெல்லி: மைனர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் 18 வயதுக்கும் குறைவான சிறுமி ஒருவருடன் பாலியல் உறவு வைத்திருந்த இளைஞர் ஒருவர் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் கூறிய சில கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பலாத்காரம்
இந்த வழக்கில் சிறுமியும் அந்த இளைஞரும் முழு சம்மதத்துடனேயே தான் உடலுறவு வைத்துக் கொண்டுள்ளனர். இருப்பினும், அந்த சிறுமி 18 வயதுக்குக் குறைவானவர் என்பதால் பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த சிறுமிக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படியே மொத்தம் மூன்று பிறந்த தேதிகள் உள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தனர்.

உத்தரவு
போக்சோ உள்ளிட்ட குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை பயன்படுத்தவே பிறந்த தேதிகளைத் தனது இஷ்டத்திற்கு அவர் மாற்றி மாற்றித் தருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவருக்குத் தேவையான நிவாரணத்தை வழங்கியது. மேலும், ஒரு நபர் முழு சம்மதத்துடன் உடல் உறவில் ஈடுபடும் போது வயதை ஆவணங்களில் இருந்து எல்லாம் சரி பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தேவையில்லை
மேலும், நீதிபதி கூறுகையில், "ஒரு நபர் முழு சம்மதத்துடன் உடல் உறவில் ஈடுபடும் போது ஆவணங்களின் படி பிறந்த தேதியைச் சரி பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உறவில் ஈடுபடும்போது ஆதார் அட்டை, பான் கார்டைப் பார்க்கவோ அல்லது அவரது பள்ளிப் பதிவுகளில் இருந்து பார்டனரின் பிறந்த தேதியைச் சரிபார்க்கவோ தேவையில்லை.

ஆதார்
இந்த வழக்கைப் பொறுத்தவரைப் பிறந்த தேதியைப் பொறுத்தவரை, அவர் மூன்று வெவ்வேறு பிறந்த தேதிகளைக் கொண்டிருப்பது தெரிகிறது. ஆதார் அட்டையில் பிறந்த தேதி 01.01.1998 என்றே இருக்கிறது. இதுவே குற்றஞ்சாட்டப்பட்டவர் மைனருடன் உடல் உறவில் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்கிறது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் இருந்து பெரும் தொகை சென்றுள்ளது. இதனால் அவர் ஹனி டிராப் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் நினைக்க முடிகிறது.

காலதாமதம்
அந்த பெண் கொடுத்த புகாரில் அவர் 2019இல் அந்த நபருடன் உறவில் இருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், இத்தனை காலத்துக்குப் பின்னர் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணை அந்த நபர் பிளாக்மெயில் செய்து இருந்தாலும், அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்து இருக்கலாம். முதற்கட்ட தகவல்களை வைத்துப் பார்க்கும் போது இது ஹனி டிராப் போலவே தெரிகிறது. பாதிக்கப்பட்ட அந்த பெண் வேறு யாராவது மீது இதேபோன்ற புகாரை அளித்துள்ளாரா என டெல்லி போலீசார் ஆய்வு செய்ய வேண்டும்.

ஜாமீன்
அந்த பெண்ணின் ஆதார் கார்டு குறித்தும் அதில் இருக்கும் தகவல்கள் குறித்தும் டெல்லி போலீசார் ஆய்வு செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர். மேலும், அந்த நபருக்கு ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார். வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, பாஸ்போர்ட்டை போலீசாரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications