எல்லாத்துக்கும் ரெடி.. பரபர தலைநகர்.. மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க டெல்லி முதல்வர் ஆணை!
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் ராணுவ மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் டெல்லி அரசு மருத்துவமனைகளின் மூத்த சுகாதார அதிகாரிகளுடன் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆலோசனை நடத்தியுள்ளார். மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போர் சூழலுக்கு தயார் நிலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எந்தவொரு அவசரநிலைக்கும் அனைத்து மருத்துவ வசதிகளும் முழுமையாக தயாராக இருப்பதை உறுதி செய்யுமாறு பல்வேறு மருத்துவமனைகளின் மூத்த அதிகாரிகளுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உடனடியாக முழுமையாக பொருத்தப்பட்ட அவசர வார்டுகளை நிறுவவும், ஒத்திகை பயிற்சிகளை நடத்தவும், மருத்துவப் பொருட்களை முன்கூட்டியே சேமித்து வைக்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மருத்துவமனைகளில் ஊழியர்கள் அல்லது மருந்துகளின் பற்றாக்குறை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் அவர்கள் எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.
"எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கவும் மக்களுக்கு சேவை செய்யவும் எங்கள் மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் உள்ள ஏற்பாடுகள் குறித்து மருத்துவ இயக்குநர்களிடமிருந்து எனக்கு அப்டேட் கிடைத்தது" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
போர் பதற்றம் உள்ள நிலையில் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது தலைநகர் டெல்லி. தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்வதற்கு முழுமையாக தற்போது டெல்லி தயாராகி வருகிறது. இன்று பகல் 3 மணிக்கு டெல்லி பொதுப்பணித்துறை அலுவலகங்களில் அபாய ஒலி எழுப்பி ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக வியாழக்கிசமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்தியா அதனை வெற்றிகரமாக முறியடித்தது. இந்தநிலயில், தற்போது டெல்லி தாக்குதலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு டெல்லி ஐடிஓ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள "ஏர் சைரன் தொழில்நுட்பத்தை" பரிசோதனை செய்து பார்த்தது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் இந்த அபாய ஒளி எச்சரிக்கை எழுப்பி ஒத்திகை பார்க்கப்பட்டது. அதேபோல முன்னதாக கடந்த 7 ஆம் தேதி பாதுகாப்பு ஒத்திகை டெல்லியில் நடைபெற்றது.
டெல்லி பொதுமக்கள் அனாவசியமாக பொது இடங்களில் கூட வேண்டாம் என்றும் எச்சரிக்கையை காவல்துறை அதிகாரிகள் விடுத்திருந்தனர். டெல்லியை சுற்றி உள்ள பல்வேறு எல்லைகளில் கண்காணிப்பு சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
மேலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுமுறையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications