அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் திடீர் நோட்டீஸ்.. டென்ஷனில் ஆம் ஆத்மி
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு இன்று திடீரென கிரைம் பிராஞ்ச் போலீசார் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமலாக்கத்துறை சம்மனுக்கு கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருக்கும் நிலையில் தற்போது கிரைம் பிராஞ்ச் போலீசார் நோட்டீஸ் விடுத்து உள்ளனர்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சியை பாடாய்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை சம்மன் விடுத்துள்ளது.

இதுவரை 5 வரை சம்மன் அனுப்பிய போதும் இவற்றை புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் நேரத்தில் என்னை பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கும் விதமாக சிறையில் அடைக்க பாஜக வகுத்த திட்டமே இது என்று குற்றம் சாட்டி வருகிறது. தொடர்ந்து சம்மனை ஏற்க மறுத்து ஆஜராகமால் புறக்கணித்து வரும் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வது குறித்தும் அமலாக்கத்துறை திட்டமிட்டு வருவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது.
இந்த விவகாரத்தால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாகவே உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் அரவிந்த் கெஜ்ரிவால் புது குண்டு ஒன்றை தூக்கி போட்டார். அதாவது தனது கட்சி எம் எல் ஏக்கள் 7 பேரிடம் பாஜக பேரம் பேசியதாகவும் 25 கோடி வரை தர தயராக இருப்பதாகவும் பாஜக கூறியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க சதி நடப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு இன்று டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் சென்றனர். எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டதாக கெஜ்ரிவால் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக அவரிடம் ஆதாரங்களை கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிற்கு இன்று திடீரென குற்றப்பிரிவு போலீசார் வருகை தந்தது ஆம் ஆத்மி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 67 இடங்களில் வென்று முதல் முறையாக டெல்லி ஆட்சியை கைப்பற்றியது. 2020 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 62 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் 8 இடங்களை வென்றது பாஜக. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications