கடமைதான் முக்கியம்.. கொரோனாவில் இறந்த உறவினரை எரியூட்டாமல் பணிக்குத் திரும்பிய போலீஸ் அதிகாரி!
டெல்லி: கொரோனாவால் குடும்ப உறுப்பினரை இழந்த சில மணி நேரத்திலேயே பணிக்குத் திரும்பிய காவல் துறை அதிகாரியின் கடமையை எண்ணி உடனிருக்கும் அதிகாரிகள் நெகிழ்கிறார்கள்.
கொரோனாவின் இரண்டாவது அலை முதல் அலையைவிட மிகவும் வீரியமாகத்தான் இருக்கிறது. இதில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளன. மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சிகிச்சை பெறுவதற்குள்ளாகவே உயிரிழக்கும் சூழல் நேரிடுகிறது.
இதன் காரணமாக ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஆலைகள், கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் என போர்க்கால அடிப்படையில் டெல்லி அரசு மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

சத்தார்பூர்
இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள சத்தார்பூர் பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் கட்டுமான பணியை காவல் துறை உதவி ஆணையர் லக்ஷய் பாண்டே கவனித்து வந்தார். இவரது நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனா தொற்றால் நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

பாதிப்பு
இதை அறிந்து இறந்த உறவினரை பார்க்க சென்ற பாண்டே உடலை எரியூட்டும் நேரத்தில் கூட குடும்பத்தினருடன் இருக்காமல் தனது கடமையை செய்ய வந்துவிட்டார். டெல்லியில் உள்ள மெக்ராவி சரக காவல் உதவி ஆணையராக பணிபுரிந்து வருகிறார் பாண்டே. இவருடைய மைத்துனருக்குத்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

உயரதிகாரிகள்
இதையடுத்து மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அந்த உறவினர் இறந்தவுடன் அவரது உடலை காசியாபாத்தில் அடக்கம் செய்வதற்காக சென்று அங்கு நீண்ட வரிசையில் டோக்கன் பெற்று காத்திருந்த போது கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கும் பணி குறித்த நிகழ்நேர அறிக்கையை உயரதிகாரிகள் பாண்டேவிடம் கேட்டுள்ளார்கள்.

துபாய்
இதையடுத்து உடனடியாக பாண்டே புறப்பட்டு பணிக்கு சென்றார். இதுகுறித்து பாண்டே கூறுகையில் எனது மைத்துனர் துபாயிலிருந்து கடந்த மாதம் இந்தியா வருகை தந்தார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. ஆனால் சோதனை எடுக்கப்பட்டதில் நெகட்டிவ் என வந்தது. இதையடுத்து அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம்.

கடமை முக்கியம்
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக காத்திருந்த போது அதிகாரிகள் சில தகவல்களை கேட்டனர். கடமை முக்கியம் என்பதால் குடும்பத்தினரை விட்டுவிட்டு கொரோனா சிகிச்சை மைய பணிகளை பார்க்க சென்றுவிட்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications