திமுக எம்பி கதிர் ஆனந்த்தை உள்ளே புகுந்து மிரட்டியவர்கள் யார்.. அதிரடியை கையில் எடுத்த டெல்லி போலீஸ்
கதிர் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் விசாரணை ஆரம்பமாகி உள்ளது
புதுடெல்லி: திமுக எம்பி கதிர்ஆனந்தை மிரட்டியவர்கள் யார் என்ற விசாரணையை டெல்லி போலீசார் கையில் எடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது... 2 நாளைக்கு முன்பு லோக்சபா சபா துவங்கியபோது திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் ஒரு பரபரப்பு புகாரை தெரிவித்தார்.

அதில், ''நான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் அத்துமீறி 2 பேர் உள்ளே நுழைந்து எனக்கு மிரட்டல் விடுத்தனர்... அவர்கள் யார் என்று கேட்டதற்கு, உளவுத்துறையினர் என்று என்னிடம் சொன்னார்கள்.. இன்று லோக் சபாவில் நான் கேட்க போகும் கேள்விகள் என்ன என்பதையெல்லாம் அவர்கள் தெரிந்து கொள்ள முயன்றனர். ஒரு எம்பிக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
கதிர்ஆனந்த் இப்படி சொன்னதுமே, இவருக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரல் எழுப்பினர்.... காங்கிரஸ் கட்சியினரும் போலீசார் அத்துமீறி நடப்பதாக பகிரங்கமாக சொன்னார்கள்.. இதையடுத்து, புகார்களை எழுத்துப்பூர்வமாக பாதிக்கப்பட்டவர்கள் எழுதி கொடுக்கலாம் என்று சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, டெல்லி போலீசிலும் கதிர் ஆனந்த் புகார் தந்திருந்தார்.. இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த டெல்லி சாணக்கியாபுரி போலீசார், தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்பி சொன்னதுபோல, தமிழ்நாடு இல்லத்துக்கு வந்து சென்றது உண்மையான உளவுத்துறை அதிகாரிகள் தானா? அல்லது வேறு யாரேனுமா?
அவர்கள் ஏன் இந்த நேரத்தில் இங்கு வந்தார்கள்? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... தமிழ்நாடு இல்லத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அங்குள்ள, வருகை பதிவேட்டையும் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அவர் யார்...துரைமுருகனின் மகன். அவரை யாராவது மிரட்ட முடியுமா, மிரட்டலுக்கு பயப்படுபவர்களா அவர்கள்? அவதூறு பரப்புவதற்காக குற்றம்சாட்டுவார்கள்" என்று பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications