டெல்லியில் இரவில் நடந்த துயரம்.. 18 பேர் பலி! ரயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது ஏன்? பரபர தகவல்
டெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் பிரக்யாராஜ் செல்ல அதிகளவில் பயணிகள் வந்திருந்ததால், ரயிலில் ஏற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பயணிகள் பலியாகியிருந்த நிலையில் பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்ன, எப்படி இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது என்பது பற்றி பரபர தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரக்யராஜ்ஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கும்பமேளாவில் கங்கை யமுனை, சரஸ்வதி நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகிறார்கள்.

கும்பமேளா நிகழ்வில் கடந்த 29 ஆம் தேதி பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த ரணத்தின் சுவடுகள் ஆறாத நிலையில், மீண்டும் ஒரு துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று இரவு டெல்லி ரயில் நிலையத்தில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான ரயில் நிலையத்தில் குவிந்து இருந்தனர்.
13, 14 ஆம் எண் பிளாட்பார்ம்
இரண்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இருந்ததால் இந்த ரயில்களில் ஏறுவதற்காக பயணிகள் காத்திருந்தனர். இந்த ரயில் தாமதமாக வந்ததால் திடீரென ரயில் நிலையத்திற்குள் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏற முயன்றதில் பயங்கர நெரிசல் ஏற்பட்டுள்ளது. ரயில் நிலைய பிளாட்பார்ம் 13 மற்றும் 14 ல் இந்த துயர சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
விபத்துக்கு காரணம் என்ன
முன்பதிவு செய்யப்படாத அதாவது அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகள் சுமார் 1,500 விற்பனை செய்யப்பட்டதும், ஸ்வதந்தரதா சோனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி ஆகிய இரண்டு ரயில்களும் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.டெல்லி ரயில் நிலைய விபத்தில் நேற்று 15 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்த ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
கூட்ட நெரிசல் விபத்து ஏற்பட்ட ரயில் நிலையம் மற்றும் பிளாட்பார்ம்களில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும் நெரிசலை தவிர்க்க ஸ்பெஷல் ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications