"இங்க வேலை செய்வதற்கு.. வேலை இல்லாமல் இருப்பதே மேல்!" அரசு வங்கி வேலையை உதறி தள்ளிய பெண்! என்ன காரணம்
டெல்லி: நமது நாட்டில் வங்கிப் பணி தான் பெரும்பாலானோர் ஆசைப்படும் ஒரு வேலையாக இருக்கும். எப்படியாவது ஒரு அரசு வங்கியில் சேர்ந்துவிட்டால் பிரச்சினை இருக்காது என்பதே பலரது கனவாகவும் இருக்கிறது. ஆனால், இங்கு அரசு வங்கியில் வேலை செய்து வந்த பெண் ஒருவர், டாக்சிக் ஒர்க் கல்ச்சர் காரணமாக வேலையையே தூக்கிப் போட்டுவிட்டார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் இன்னும் அரசுப் பணி என்பது பலரும் அடையத் துடிக்கும் இலக்காக இருக்கிறது. அரசு வேலையில் சேர்ந்துவிட்டால் நிலையான வாழ்க்கை கிடைக்கும் என்பதால் பலரும் அரசு வேலையில் சேரவே விரும்புகிறார்கள். ஆனால், பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி வந்த 29 வயது பெண் ஒருவர் அரசு வேலையை உதறித் தள்ளி இருக்கிறார்.

டாக்சிக் வேலை
வாணி என்ற அந்தப் பெண், தனது வங்கிப் பணி மன அமைதியைக் குலைப்பதாகச் சொல்லி வேலையை விட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில், "டாக்சிக் வேலையில் இருந்து வெளியேறுவதே நமது நாட்டில் பெரிய விஷயம் தான்.. எனக்குப் பலனளிக்காத அத்தியாயத்தை இன்றோடு வெற்றிகரமாக முடித்துக் கொண்டேன்" என்ற சொல்லி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அரசு வங்கியில் வேலை செய்து வந்த அவர், ஏன் அந்தப் பணியை விட்டார் என்பதையும் விளக்கியுள்ளார்.
யார் அந்தப் பெண்
2022ல் வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், ஓராண்டு பயிற்சி முடிந்ததும், மீரட்டில் ஸ்கேல் 1 அதிகாரியாக வேலையில் சேர்ந்தார். இவருக்குக் கடன்களைக் கையாளுதல் போன்ற பணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் வேலை செய்யும் இடம் நச்சுத்தன்மை கொண்டதாக இருந்ததாகவும் இதனால் அவர் வேலையை விட்டுவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்தப் பணி எனக்கு நிதி சுதந்திரத்தை அளித்தாலும், எனது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தினாலும் எனக்கு மன நிம்மதியைக் கிடைக்கவில்லை. இது மனதளவில் சோர்வடையச் செய்யும் வேலை.. நாம் செய்யும் வேலைக்கும் கூட அங்கீகாரம் எதுவும் கிடைக்காது. இந்த வேலை எனது கேரக்டரையே மாற்றிவிட்டது.
3 ஆண்டுகள் வேலை
ஒரு கட்டத்தில் என்னை நானே வெறுக்க ஆரம்பித்துவிட்டேன். நான் மிகவும் மகிழ்ச்சியான நபராக இருந்தேன்.. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் நான் மிகவும் எரிச்சலூட்டுபவளாகவும், எளிதில் கோபப்படுபவளாகவும் மாறிவிட்டேன். எனவே, பணத்தை விட மன அமைதியைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துவிட்டதாக உணர்கிறேன்.
அதேநேரம் நான் இப்படிச் சொல்வதால் யாரும் வங்கிப் பணியில் சேர வேண்டாம் என நான் சொல்லவில்லை.. எனது கதையை மட்டுமே நான் இங்குப் பகிர்கிறேன்.. உங்களுக்கு செட் ஆகாத இடத்தை விட்டு வெளியேறும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் மன அமைதிக்கும் எல்லையே இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
யாரையும் குறை சொல்லவில்லை
வாணி இந்த வீடியோவில் யாரையும் குறை சொல்லவில்லை.. ஆனால், அந்த வேலை செட்அப் தன்னை கடுமையாகப் பாதித்ததாகவும் இதன் காரணமாகவே வேலையை விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலரும் வாணி எடுத்த முடிவைப் பாராட்டி வருகிறார்கள். புதிய தொடக்கத்திற்கு வாழ்த்துகள் எனப் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரம் சிலர் வேலையை விடுவது பெரிய விஷயம் வேறு மாற்று வழிகளை முயன்று பார்த்திருக்கலாம் எனப் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications