தொகுதி மறுவரையறை... ஜம்முவுக்கு 6; காஷ்மீருக்கு 1 தொகுதி கூடுதலாக ஒதுக்க பரிந்துரை
டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 7 சட்டசபை தொகுதிகளை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய தொகுதி மறுவரையறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில தகுதியுடன் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின் சிறப்பு அந்தஸ்து பெற்றதாக இருந்தது. மத்தியில் ஆளும் பாஜக அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின் கீழான ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.

2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பு
மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வராத வகையில் அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தொகுதி மறுவரையறை
இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், லடாக்கில் அரசியல் நடவடிக்கைகளை தொடங்கும் முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி இருந்தார். முதல் கட்டமாக தொகுதி மறுவரையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

டெல்லியில் கூட்டம்
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரசாத் தேசாய் தலைமையில் தொகுதி மறுவரையறை கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநில கட்சிகள் இந்த ஆணையக் கூட்டங்களில் பங்கேற்க மறுத்தனர். இதனால் இக்கமிஷனின் பணி காலமும் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே டெல்லியில் இக்கமிஷன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?
இந்த கூட்டத்தில் ஜம்மு பிராந்தியத்துக்கு 6 தொகுதிகளும் காஷ்மீருக்கு கூடுதலாக 1 தொகுதியும் ஒதுக்குவது என பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஜம்மு பிராந்தியத்தின் மொத்த சட்டசபை தொகுதிகள் 43 ஆக இருக்கும்; காஷ்மீர் பிராந்தியத்தின் மொத்த சட்டசபை தொகுதிகள் 47 ஆக இருக்கும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை 90 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications