சிவசேனா கூட்டணி கட்சிதான்!.. அதுக்காக இப்படியா பேசுவது? அப்படி என்ன குமாரசாமி மீது கோபம்?
டெல்லி: கர்நாடகத்தில் மஜத ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகுதான் அந்த மாநிலத்தில் ஜனநாயகம் புத்துயிர் பெற்றுள்ளதாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் 14 மாதங்கள் நீடித்த காங்கிரஸ்- மஜத கூட்டணி, நேற்று முன் தினம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து அரசு கவிழ்ந்தது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பாஜகவின் குதிரை பேரம் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.
இந்த நிலையில் அடுத்து பாஜக ஆட்சி அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
ஆட்சியில்
அதில் குறிப்பிடுகையில், குமாரசாமி அரசு கவிழ்ந்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தானிலும் ஜனநாயகம் வெல்ல வேண்டும். கர்நாடகத்தில் 105 இடங்களில் பாஜக வெற்றி பெற்ற போதிலும் அது ஆட்சியில் இல்லாமல் இருந்து வந்தது.
முதல்வர்
குமாரசாமி கட்சிக்கு வெறும் 37 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். அது போல் காங்கிரஸ் கட்சிக்கு 78 எம்எல்ஏக்கள் இருந்தனர். வெறும் 37 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்துக் கொண்டு காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி முதல்வரானார்.
ஜனநாயகம்
இவரது ஆட்சி 14 மாதங்கள் மட்டுமே நீடித்தன. குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு என்பது விளக்கு போன்றது, எப்போது வேண்டுமானாலும் அணையும் நிலையில் இருந்தது. எனவே தற்போது மஜத- காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தவுடன்தான் கர்நாடகத்தில் ஜனநாயகம் புத்துயிர் பெற்றுள்ளது.
குதிரை பேரம்
அது போல் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலும் அதுபோன்று ஜனநாயகம் தழைக்க வேண்டும் என சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டணி கட்சிதான் அதற்காக குதிரை பேரத்தை சிவசேனா ஊக்குவிப்பதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.