புண்ணிய நதிகள் பல இருந்தும்.. வட இந்தியா போல தென் இந்தியாவில் கும்பமேளா நடப்பது இல்லை, ஏன் தெரியுமா?
டெல்லி: வட இந்திய நகரங்களில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நிகழ்வுகள் பெரும் ஆன்மீக கொண்டாட்டமாக நடைபெறுவது வழக்கம். கும்பமேளா நடைபெறும் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மாநிலங்களின் அரசுகளே பல கோடி ரூபாய் செலவு செய்து இத்தகைய ஆன்மீக ஒன்று கூடல்களை நடத்துகின்றன. ஆனால் இத்தகைய கும்பமேளா எனும் ஆன்மீக ஒன்று கூடல் தென்னிந்திய மாநிலங்களில் பொதுவாக நடப்பதே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்துக்கள் பொதுவாக பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகளில் புனித நீராடுதல் மற்றும் சடங்குகளை மேற்கொள்வது வழக்கமாக கடைபிடிக்கின்றனர். ஆனால் வட இந்தியாவில் உள்ள இந்துக்கள் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா என புனித நீராடல்களுக்காக மிகப் பெரும் ஆன்மீக திருவிழாவை நடத்துகின்றனர்.

இத்தகைய ஆன்மீகத் திருவிழா தென்னிந்தியாவின் புனித நதிகள் எதனிலும் எப்போதும் நடத்தப்பட்டதில்லை. இதன் பின்னணி குறித்து நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹரித்வார் மகா கும்பமேளாவுக்கு நேரடியாக சென்ற போது விசாரித்தோம். பொதுவாக புனித நீராடல் என்பதாகத்தான் மகா கும்பமேளா நிகழ்வுகள் வெளியே தெரியும். ஆனால் மகா கும்பமேளா காலங்களில் இன்னொரு மிக முக்கிய நிகழ்வும் நடந்தேறும். அதுதான் இந்து சாதுக்களின் ஒன்று கூடல்.
இந்து சாதுக்கள் என்பவர்களை வட இந்தியாவின் புனித நகரங்களில் அதிகமாக பார்க்க முடியும். குறிப்பாக காசி, கங்கை கரைகளில் இவர்கள் சர்வ சாதாரணமாக நடமாடுவார்கள். உடல் முழுக்க சாம்பல் பூசியவர்களாக, நிர்வாண சாமியார்களாக, அகோரிகள் எனப்படும் மண்டை ஓடு ஏந்தியவர்களாக நடமாடும் இவர்களை சிவனின் அவதாரமாகவே வட இந்திய பக்தர்கள் வணங்கி வழிபடுகின்றனர்.
இத்தகைய சாதுக்களை ஒருங்கிணைக்கக் கூடிய அமைப்புகள்தான் அகாடாக்கள். பல்வேறு அகாடாக்கள், சாதுக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அகாடாக்கள் ஹரித்வார், குஜராத், காசி என வட இந்தியாவில்தான் உள்ளன. தென்னிந்தியாவில் இருந்து இந்து சாதுக்களாக மாறுவோரும் வட இந்திய அகாடாக்களில்தான் இணைகின்றனர்.
அகாடாக்களில் இணைபவர்கள், இந்து மதத்தை பாதுகாப்பதற்கான தற்கொலைப்படை வீரர்களைப் போல சர்வபரி தியாகத்துக்கும் தயாரானவர்கள். அகோரிகள் குறித்த பிம்பம் இப்படித்தான் உருவெடுத்திருக்கிறது. இந்த அகோரிகள் மனித மாமிசமும் சாப்பிடுகிறவர்கள்தான்.. காசியின் கங்கை கரைகளில் இதனை பார்க்க முடியும்.. அத்தனை மூர்க்கமானவர்கள்.
இல்லற வாழ்க்கையைத் துறக்க வேண்டியவர்கள். இந்துக்களுக்கு எங்கே துயரம் என்றாலும் இந்த அகாடாக்களின் சாதுக்களே களமிறங்குகிறவர்கள்.
மகா கும்பமேளா, கும்பமேளா காலங்களில்தான் ஒட்டுமொத்த சாதுக்கள் அதாவது அனைத்து அகாடாக்களும் ஒரே இடத்தில் ஒன்று கூடுகின்றன. இந்த அகாடாக்கள் அனைத்துக்குமான மகா மண்டலேஸ்வர் என்பவரைத் தேர்ந்தெடுக்கவே இப்படி அனைத்து அகாடா சாதுக்களும் ஒன்று கூடுவது வழக்கம்.
இந்த அகாடாக்களைச் சேர்ந்த சாதுக்கள் அனைவரும் தங்களை சிவனின் மறுவடிவமாக உணருகின்றனர். புனித நீராடல் நாட்களில் தங்களது அகாடாதான் உயர்ந்தது; தாங்களே முதலில் நீராட வேண்டும் என முனைப்பு காட்டுவர்; இந்த புனித நீராடலுக்கு முன்னர் நிர்வாண கோலத்தில் பல்வேறு சாகசங்களுடன் பல்லாயிரக்கணக்கில் சாதுக்கள் பேரணி நடத்துவதை பார்ப்பதை வட இந்தியர்கள் புனிதமாக போற்றுவர்; அப்படி சாதுக்கள் புனித நீராடுவதற்காக போட்டி போட்டுக் கொண்டு சண்டையிட்டு செத்து மடிந்த கதைகளும் ஏராளம் உண்டு. இதனாலேயே ஒவ்வொரு கும்பமேளாவுக்கும் இந்த அகாடாதான் முதலில் புனித நீராட வேண்டும் என ஒழுங்குபடுத்திய நிகழ்வுகளும் இருக்கின்றன.
பொதுவாக கும்பமேளா என்பது புனித நீராடலாக தென்னிந்தியாவில் பதியப்பட்டிருக்கிறது; ஆனால் புனித நீராடல் என்கிற கும்பமேளாவுக்கு பின்னர் இருக்கும் 'இந்துத்துவா' சாதுக்களின் அரசியல் உலகம் மறைக்கப்பட்டிருக்கிறது. இது தென்னிந்தியா அதிகம் அறியாத ஒரு உலகம். அதனாலேயே தென்னிந்தியாவில் பொதுவாக மகா கும்பமேளா நிகழ்வுகள் எப்போதும் நடப்பதும் இல்லை.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்ய போராடியவர்கள், பெரியார் போல மதத்தையே எதிர்த்து போராடியவர்கள், நாங்கள் இந்துக்களே அல்ல பிரகடனம் செய்யக் கூடிய சைவர்கள் என பல்வேறு பிரிவினர் செல்வாக்கு செலுத்துகிறவர்கள். இதனால்தான் வட இந்தியாவில் நடைபெறும் இந்த கும்பமேளா ஆன்மீகப் பெருவிழா ஒன்று கூட விந்தியத்தை தாண்டி தென்னிந்திய நிலப் பகுதியில் கால் வைப்பதும் இல்லை; அப்படி கால் வைத்து பல்லாயிரக்கணக்கான நிர்வாண சாதுக்கள் தென்னிந்திய நகரங்களில் நடமாடினால் மக்கள் என்ன மாதிரியான எதிர்வினையாற்றுவார்கள் என்பதை வட இந்திய கும்பமேளா ஏற்பாட்டாளர்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள் என்பதுதான் நிஜமும் கூட.












Click it and Unblock the Notifications