ஏலத்தில் விடப்படும் பிரதமரின் பரிசுப் பொருட்கள்...அடடே இதுவெல்லாமா இடம் பெறுகிறது!
டெல்லி: கங்கை நதியை தூய்மையாக்கும் திட்டத்திற்கு உதவும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு பொருட்கள் இன்று ஏலத்தில் விடப்படுகின்றன.
நாட்டின் 40 சதவிகித மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும் கங்கை நதியின் தூய்மைக்காக நிதி திரட்டும் நோக்கில் பிரதமரின் பிறந்த நாளான இன்று அவரின் பரிசு பொருட்கள் ஏலத்தில் விடப்படுகின்றன.
கடந்த 2019-2020 ஆண்டில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்குள் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், இதற்கான நிதி தேவை மேலும் அதிகரித்துள்ளது.

தூய்மை கங்கை
இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவரின் பரிசு பொருட்கள் இன்று மின்னணு ஏலத்தில் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் பிரதான நதியாக உள்ள கங்கை நதியை தூய்மைப்படுத்த 'நமாமி கங்கை திட்டம்' உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் 2019-2020ல் நதியை தூய்மையாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததைவிட இதற்கான நிதி தேவை அதிகம் என்பது பணிகளை துவங்கிய பின்னர்தான் தெரியவந்துள்ளது.

ஏலம்
இதனையடுத்து இந்த திட்டத்திற்கு நிதி திரட்டும் நோக்கில், பிரதமரின் பரிசு பொருட்கள் ஏலத்தில் விடப்படும் என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியிருந்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "பிரதமருக்கு பரிசாக கிடைக்கப்பெற்ற விநாயகர் சிலை, அயோத்திர ராமர் சிலை, வரணாசி காசி-விஸ்வநாதர் கோயில் மாதிரிகள் ஆகியவை மின்னணு ஏலத்தில் விடப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதி 'நமாமி கங்கை' திட்டத்திற்கு பயன்படுத்தப்படும்" என்று கூறியுள்ளார்.

பரிசு பொருட்கள்
இந்த பரிசு பொருட்கள் லிஸ்ட்டில் ஏகப்பட்டவை உள்ளன. சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடி நேதாஜி சிலையை திறந்து வைத்தார். இதற்கு முன்னதாக இந்த சிலையின் மாதிரி கூட பரிசாக பிரதமருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற சில அற்புத பொருட்கள் ஏலத்தில் இடம்பெறுகின்றன. அதேபோல சர்வதேச அளவில் நடைபெற்ற காமன்வெல்த், பாராலிம்பிக் மற்றும் தாமஸ் கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற வீரர்கள் பிரதமரை சந்தித்தபோது சில பொருட்களை வழங்கினர். இந்த பொருட்களும் ஏலத்தில் இடம் பெறுகின்றன.

நிதி தேவை
தூய்மை கங்கை திட்டம் என்பது இந்தியாவின் ஒரு கனவு திட்டம் என்று கூட சொல்லலாம். நாட்டின் 40 சதவிகித மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இந்த நதி இருக்கிறது. ஆனால் இந்த நதியின் நீர் பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல என்று பல ஆய்வுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்நிலையில் இந்நதியை சீரமைத்து மறு பயன்பாட்டுக்கு கொண்டுவருவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். ஆனால் இந்த திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. இந்த தூய்மை திட்டத்திற்கு உலக வங்கி கூட சுமார் 400 பில்லின் டாலர் உதவி செய்வதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications