ஆர்மியில் இருந்து கொண்டு இப்படி செய்யலாமா?.. தோனியின் அந்த முடிவு.. கொதித்த ரசிகர்கள்..என்ன நடந்தது?
ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு சரியாக ஒரு நாளுக்கு முன், சென்னை அணியின் கேப்டன் தோனி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
டெல்லி: ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு சரியாக ஒரு நாளுக்கு முன், சென்னை அணியின் கேப்டன் தோனி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். தோனி எடுத்த முடிவு ஒன்று அவருக்கு எதிராகவே திரும்பி உள்ளது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் லடாக் எல்லையில் உரசல் நிலவி வருகிறது. லடாக்கில் நடக்கும் இந்த மோதல் எப்போது வேண்டுமானாலும் பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் எல்லையில் இரண்டு தரப்பும் படைகளை குவித்து வருகிறார்கள்.
எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் சீன பொருட்களுக்கு எதிராக கடுமையான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. சீன பொருட்களை வாங்க கூடாது என்று தீவிரமான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

என்ன பிரச்சாரம்
அதிலும் சீனாவின் செயலிகளுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதனால் டிக்டாக் உட்பட சீனாவின் செயலிகள் வரிசையாக தடை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தமாக 224 சீனாவின் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு எதிரான பொருளாதார ரீதியான சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று இதை வர்ணிக்கிறார்கள்.

ஐபிஎல்
அதேபோல் ஐபிஎல்லில் இருந்தும் இந்த முறை சீன நிறுவனம் ஆன விவோ நிறுவனம் விலகி இருக்கிறது. இந்த முறையும் ஐபிஎல் போட்டியை விவோ நிறுவனமே வழங்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் எதிர்ப்பு காரணமாக விவோ நிறுவனம் இதில் இருந்து விலகியது. ஐபிஎல் போட்டியை வழங்க போவதில்லை என்று அறிவித்தது. மற்ற நிறுவனங்களுக்கு ஸ்பான்சர் செய்வதில் இருந்தும் விவோ விலக உள்ளது.

ஆனால் என்ன
விவோ நிறுவனத்தின் தாய் நிறுவனம் பிபிகே எலக்ட்ரானிக்ஸ் ஆகும். இந்த நிலையில் அதே பிபிகே எலக்ட்ரானிக் நிறுவனத்தின் இன்னொரு நிறுவனமான ஓப்போ நிறுவனத்துடன் தற்போது தோனி கைகோர்த்ததுதான் சர்ச்சைக்கு காரணமாக மாறியுள்ளது. ஆம் , ஓப்போ நிறுவனம் உடன் தோனி ஒப்பந்தம் செய்து இருக்கிறார். ஓப்போ நிறுவனத்தின் #BeTheInfinite என்ற பிரச்சாரத்திற்காக தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சையான ஒப்பந்தம்
ஓப்போ நிறுவனத்தின் ரெனோ 4 ப்ரோ மாடல் போனின் விளம்பரத்திற்காக தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தோனியின் இந்த செயல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தோனி எப்படி சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யலாம். எல்லையில் பிரச்சனை நிலவும் நிலையில் தோனி இப்படி செய்தது எந்த விதத்தில் நியாயம் என்று ரசிகர்கள் கேட்க தொடங்கி உள்ளனர். அவர் உடனே இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

தோனி ராணுவம்
அதுவும் தோனி ராணுவத்தில் இருந்து கொண்டு இப்படி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரசிகர்கள் கோபமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். தோனி இந்திய ராணுவத்தின் டெரிட்டோரியல் பிரிவில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். ஆனால் இப்படி இந்திய ராணுவத்தில் கவுரவ பொறுப்பில் இருந்து கொண்டு, அவர் சீன நிறுவனத்திற்கு விளம்பரம் செய்வது ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications