Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணை ஜனாதிபதி தேர்தல்.. சொல்லி அடித்த அமித் ஷாவின் சாணக்கியத்தனம்.. எதிர்கட்சிகளையே உடைச்சிட்டாரே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று, எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமித் ஷா சாணக்கியத்தனமாக செயல்பட்டு எதிர்க்கட்சி வாக்குகள் சிலவற்றை பாதுகாப்பிற்காக தங்கள் பக்கம் இழுத்துள்ளாரோ என்ற விவாதங்களும் இதனால் எழுந்துள்ளன.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் முடிவுகள் ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தன. இரு அவைகளிலும் ஆளும் தரப்பின் பலம் அதிகமாக இருந்ததே இதற்கு முக்கியக் காரணம். இத்தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனின் வெற்றி வித்தியாசத்தைக் குறைப்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான நோக்கமாக இருந்தது. இதற்காக நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

CP Radhakrishnan 2025 Vice President election

நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட எடுத்த முயற்சிகளில் சில சவால்களை சந்தித்தன. கணக்கீடுகளின்படி, இந்திய கூட்டணிக்கு வரவேண்டியதை விட குறைவான வாக்குகள் வந்துள்ளன. இத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த பலம் 439 ஆக இருந்தது. இருப்பினும், சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 452 வாக்குகள் கிடைத்தன.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி விதிமுறை (whip) பொருந்தாது என்ற நிலையிலும், எதிர்க்கட்சிகள் தங்கள் அனைத்து உறுப்பினர்களையும் வாக்களிக்க வைத்தனர். இத்தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களான சுதீப் பந்தோபாத்யாயா மற்றும் சவுகதா ராய் ஆகியோர் கூட வாக்களிக்க வந்தனர்.

சி.பி. ராதாகிருஷ்ணனின் வெற்றி

மேலும், வெளிநாடுகளில் இருந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களான சவுதி அரேபியாவில் இருந்த இம்ரான் மசூத் மற்றும் அமெரிக்காவில் இருந்த வைத்திலிங்கம், அத்துடன் ஆஸ்திரேலியாவில் இருந்த மாநிலங்களவை உறுப்பினர் இம்ரான் பிரதாப்கர்ஹி ஆகியோரும் உரிய நேரத்தில் நாடு திரும்பி வாக்களித்தனர். காங்கிரஸ் கட்சி தனது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் 100% வருகையை உறுதி செய்ய 10 ஒருங்கிணைப்பாளர்களை நியமித்திருந்தது.

பகல் 2 மணிக்குள் பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் கமல் ஹாசன் உட்பட, வாக்களிக்காத சில உறுப்பினர்களுக்குத் தீவிர அழைப்புகள் விடுக்கப்பட்டன. வழக்கமாக வாக்களிப்பதில் தவறும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஹர்பஜன் சிங் போன்றோரும் இம்முறை அரிதாக வாக்களிக்க வந்தனர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை, எதிர்க்கட்சிகள் குறைந்தது 315 வாக்குகளைப் பெறும் என எதிர்பார்த்தன. மாலை 5:14 மணிக்கு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் (தகவல் தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில், "எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்றன. அதன் 315 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்துள்ளனர். இது முன் எப்போதும் இல்லாத 100% வருகை" என்று பதிவிட்டார்.

எதிர்க்கட்சி வேட்பாளர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 767. இதில் 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி மற்றும் ராஜ்யசபா பொதுச்செயலாளர் பி.சி. மோடி தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி தேர்தல்

பெரும்பான்மை பெறுவதற்கு 377 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளும், ரெட்டி 300 வாக்குகளும் பெற்றதாக மோடி அறிவித்தார். மக்களவை மற்றும் ராஜ்யசபாவின் தற்போதைய பலத்தின் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களிடமிருந்து ராதாகிருஷ்ணன் குறைந்தபட்சம் 427 வாக்குகள் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பி.க்கள் ஆதரவுடன், அவருக்கு 438 வாக்குகள் கிடைத்திருக்கும். சுயேச்சை மற்றும் பிற நடுநிலையான எம்.பி.க்களின் வாக்குகளையும் சேர்த்தால் 449 வாக்குகள் கிடைத்திருக்கும்.

சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள்

அதே சமயம், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றதால், ரெட்டிக்கு 315 வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதி முடிவுகளில் ராதாகிருஷ்ணன் எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார். ரெட்டி எதிர்பார்த்த எண்ணிக்கையை விட குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார். இக்கூற்றுப்படி, எதிர்க்கட்சிகளுக்கு 15 வாக்குகள் குறைவாகக் கிடைத்தன. செல்லாத வாக்குகளான 15 வாக்குகளும் எதிர்க்கட்சிகளுக்குரியவை என்று ஒரு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அதே சமயம், கட்சி மாறிய வாக்களிப்பு (cross-voting) நடந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. செல்லாத வாக்குகளில் பெரும்பாலானவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், சில வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

அமித் ஷா சாணக்கியத்தனம்

செல்லாத 15 வாக்குகளும் எதிர்க்கட்சியில் இருந்து வந்திருந்தாலும், ராதாகிருஷ்ணன் எதிர்பார்த்ததை விட சில வாக்குகள் அதிகம் பெற்றிருப்பது, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக் காட்டுகிறது. முக்கியமாக இந்தியா கூட்டணியில் சில கருப்பு ஆடுகள் இருப்பதை உறுதி செய்கின்றன. அதாவது இந்தியா கூட்டணிக்குள் பாஜகவிற்கு ஆதரவாக சிலர் இருப்பதை உறுதி செய்கிறது. அமித் ஷா சாணக்கியத்தனமாக செயல்பட்டு எதிர்க்கட்சி வாக்குகள் சிலவற்றை பாதுகாப்பிற்காக தங்கள் பக்கம் இழுத்துள்ளாரோ என்ற விவாதங்களும் இதனால் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+