ஒரு போட்டோ கூட வரலயே! பிரதமர் மோடி - மணிப்பூர் சிஎம் சந்திப்பு நடந்ததா? சந்தேகம் கிளப்பும் காங்கிரஸ்
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை மணிப்பூர் முதல்வர் பிரென் சிங் உண்மையில் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினாரா? என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையில் சந்தித்து பேசியிருந்தால் அது தொடர்பான எந்த ஒரு புகைப்படமும் ஏன் வெளியிடப்படவில்லை எனவும் ஜெய்ராம் ரமேஷ் காட்டமாக விமர்சித்து இருக்கிறார்.
டெல்லியில் கடந்த வார இறுதியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தனர். அதே வேளையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆளும் முதல்வர்கள் பங்கேற்றனர்.

அந்த வகையில், மணிப்பூர் முதல்வர் பிரென் சிங்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்தார். நிதி ஆயோக் கூட்டத்திற்கு பிறகு பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையும் மேற்கொண்டார். அதன்பிறகு பிரதமர் மோடியை மணிப்பூர் முதல்வர் சந்தித்து பேசியதாக செய்தி வெளியானது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதலே பதற்றமான சூழல் நிலவுகிறது.
மெய்தி மற்றும் குக்கி இன மக்கள் இடையே வெடித்த மோதலால், அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டது. ஓராண்டைக் கடந்தும் அங்கு இன்னமும் இயல்பு நிலை திரும்பவில்லை. வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வேன்டும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இத்தகைய சூழலில் தான், பிரதமர் மோடியை மணிப்பூர் முதல்வர் டெல்லியில் சந்தித்து பேசியிருக்கிறார்.
இந்த சந்திப்பின் போது அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரும் இருந்ததாக செய்தி வெளியாகியிருந்தது. இது தொடர்பாகத்தான் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம் கிளப்பியிருக்கிறார். ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "வழக்கமாக இத்தகைய சந்திப்புகளின் போது புகைப்படங்கள் வெளியிடப்படும். ஆனால் மணிப்பூர் முதல்வர் தரப்பிலோ பிரதமர் அலுவலகம் தரப்பிலோ இதுவரை இருவரும் சந்தித்து பேசியது தொடர்பான ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை.
இதில் என்ன தயக்கம்? அல்லது இந்த சந்திப்பு உண்மையில் நடக்கவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியை அருணாசல பிரதேச முதல்வர் சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். மேலும், மணிப்பூர் முதல்வரிடம் அம்மாநில மக்கள் முன்வைக்கும் கேள்வி இதுதான்.. பிரதமர் மோடியை பிரென் சிங் தனிப்பட்ட முறையில் சந்தித்தாரா? மணிப்பூரில் உள்ள சூழல் குறித்து விவாதித்தாரா?" என்றும் கேட்டுள்ளனர்.
அதேபோல, பிரதமர் மோடி உக்ரைன் பயணம் செல்வதற்கு முன்பாகவோ அல்லது அதற்கு பிறகோ மணிப்பூருக்கு வருமாறு பிரேன் சிங் அழைத்தாரா என்றும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டு ஓராண்டை கடந்த நிலையிலும் இதுவரை மோடி அங்கு செல்லவில்லை என்பதே எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் பிரதான விமர்சனமாக உள்ளது. இத்தகைய சூழலில் தான் ஜெய்ராம் ரமேஷ் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications