நாட்டையே உலுக்கிய எலும்புக்கூடு விவகாரம்.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விளக்கம்
டெல்லி: ஒடிசா மாநிலத்தில் பழங்குடி நபர் ஒருவர் தனது அக்காவின் இறப்பை நிரூபிக்க, அவரது எலும்புக்கூட்டையே வங்கிக்குத் தூக்கி வந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "நேரில் அழைத்து வரச் சொன்னதால்தான் இப்படிச் செய்தேன்" என்று அந்த நபர் கூறினார். இது இன்னமும் பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனிடையே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியோ அப்படி எல்லாம் நாங்கள் கூறவே இல்லை.. அவரது அக்காவை நாங்கள் அழைத்துவர சொல்லவில்லை.. இறப்பு சான்றிதழ் மட்டுமே கேட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளது.
ஒடிசாவின் தியானலி கிராமத்தைச் சேர்ந்த 50 வயது ஜீது முண்டா என்பவரது மூத்த சகோதரி கல்ரா முண்டா (56), கடந்த ஜனவரி 26, 2026 அன்று காலமானார். அவரது வங்கிக் கணக்கில் இருந்த 20,000 ரூபாயை எடுப்பதற்காக ஜீது முண்டா கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள மாலிபோசி கிராம வங்கி கிளைக்குச் சென்றிருக்கிறார்,

அப்போது வங்கி அதிகாரிகள் இறப்பு சான்றிதழ் உள்பட வங்கியில் பணம் எடுப்பதற்கான உரிய ஆவணங்களைக் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், ஜீது முண்டா கல்வி கற்காதவர் என்பதால் போதிய நடைமுறைகள் தெரியவில்லை.. தனது சகோதரி இறந்துவிட்டதை அதிகாரிகள் நம்பவில்லை என்றும், அவரை நேரில் அழைத்து வரும்படி கட்டாயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். அத்துடன் பணம் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அவர், அடக்கம் செய்யப்பட்ட இடத்தைத் தோண்டி தனது சகோதரியின் எலும்புக்கூட்டை எடுத்து வந்து வங்கி அதிகாரிகளின் முன்பு வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜீது முண்டா, "நான் பலமுறை வங்கிக்கு அலைந்துவிட்டேன். பணத்தை எடுக்க கணக்கு வைத்திருப்பவரை நேரில் அழைத்து வரச் சொன்னார்கள். அவர் இறந்துவிட்டதாகச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அதனால் விரக்தியில், கல்லறையைத் தோண்டி அவரது எலும்புக்கூட்டை ஆதாரமாகத் தூக்கி வந்தேன்," என்று ஆதங்கப்பட்டார்.
இந்தியன் ஓவர்சீஸ் விளக்கம்:
இந்தச் சம்பவம் வைரலாகி கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், 'இந்தியன் ஓவர்சீஸ் வங்கி' விளக்கம் அளித்துள்ளது. அதில், "இறந்தவர் நேரில் வர வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் ஒருபோதும் கூறவில்லை. ஏப்ரல் 27 அன்று தான் அந்த நபர் முதல்முறையாக வங்கிக்கு வந்தார். மூன்றாம் நபர் பணத்தை எடுக்க அனுமதி கிடையாது என்பதையும், இறப்புச் சான்றிதழ் கட்டாயம் என்பதையும் மட்டுமே அதிகாரிகள் விளக்கினார்கள்," என்று தெரிவித்துள்ளது.
போலீஸ் தலையீடு
இந்த வினோதச் சம்பவத்தால் வங்கியில் பரபரப்பு நிலவியதை அடுத்து, காவல்துறையினர் தலையிட்டு அந்த எலும்புக்கூட்டை மீண்டும் உரிய முறையில் அடக்கம் செய்தனர்.
இந்தச் சம்பவம், டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நாம் முன்னேறினாலும், கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்களிடையே வங்கி நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு இன்னும் எட்டாக்கனியாகவே இருப்பதைக் காட்டுகிறது. ஒருபுறம் வங்கி விதிமுறைகள் பாதுகாப்பிற்காக இருந்தாலும், மறுபுறம் படிப்பறிவில்லாத எளிய மக்களிடம் அந்த விதிமுறைகளை அதிகாரிகள் கையாளும் விதம் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. முறையான இறப்புச் சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்களும், வங்கி அதிகாரிகளின் கனிவற்ற அணுகுமுறையுமே ஒரு சாமானியனை இவ்வளவு விபரீதமான முடிவை எடுக்கத் தூண்டியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.












Click it and Unblock the Notifications