சொத்து குவிப்பு வழக்கு: சிபிஐ மனு டிஸ்மிஸ்- ஹேப்பி மோடில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார்!
டெல்லி: கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் மாநில துணை முதல்வருமான டிகே சிவகுமார் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு விசாரணைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான சிபிஐ மனு மீது உச்சநீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது. இதனால் டிகே சிவகுமார் மீதான வழக்கு விசாரணைக்கான கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தடை தொடருகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் அன்னிய செலாவணி மோசடி உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு டிகே சிவகுமாருக்கு சொந்தமான வீடு, நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இவ்வழக்கில் அமலாக்கத்துறை உள்ளிட்டவை விசாரணை நடத்திய பிறகு 2019-ம் ஆண்டு டிகே சிவகுமார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் தம் மீதான விசாரணைக்கு தடை கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சிவகுமார் மனுத் தாக்கல் செய்தார். இதனை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி சிவகுமார் மீதான விசாரணைக்கு தடை விதித்தது கர்நாடகா உயர்நீதிமன்றம். இந்த தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
டிகே சிவகுமார் வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம், தொடக்கம் முதலே கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து வந்தனர். மேலும் இவ்வழக்கு விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இன்றும் உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய், சிடி ரவிக்குமார் மற்றும் சஞ்சய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சிபிஐ-ன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. அப்போது சிபிஐ மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவில் தலையிட மறுத்துவிட்டனர். இதனால் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தரப்புக்கு நிம்மதி கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications