கனிமொழி உட்பட “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் நாளை மணிப்பூர் பயணம்- 18 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு!
டெல்லி: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உட்பட "இந்தியா" கூட்டணியின் எம்.பி.க்கள் குழு நாளை மணிப்பூர் சென்று நிலைமைகளை ஆய்வு செய்ய உள்ளதாக ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.
மணிப்பூரில் 3 மாதங்களாக இனமோதல்கள் நீடித்து வருகின்றன. மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான மோதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 50,000க்கும் அதிகமானோர் சொந்த வாழ்விடங்களைவிட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரை விட்டு குக்கி இனமக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து மிசோரம் மாநிலத்துக்கு சென்றுள்ளனர்.

மணிப்பூர் இனமோதல்களைத் தொடர்ந்து குக்கி மக்களுக்கு என தனியான நிர்வாக கவுன்சில் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மணிப்பூரில் குக்கி இன பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்ட வீடியோ நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் பரிந்துரைத்துள்ளது.
மேலும் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தரக் கோரி கடந்த 6 நாட்களாக இரு சபைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி உள்ளனர். இன்று 7-வது நாளாகவும் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கக் கூடும்.
இந்நிலையில் மணிப்பூர் நிலைமைகளை ஆய்வு செய்ய "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் குழு நாளை மணிப்பூர் செல்கிறது. தற்போது இந்தக் குழுவில் இடம்பெறும் எம்.பி.க்கள் தொடர்பான விவரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. "இந்தியா" கூட்டணியின் முதன்மை கட்சிகளில் ஒன்றான திமுக சார்பாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி இடம்பெறுகிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஃபைசல் முகமது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், ஜாவேத் அலி, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சந்தீப் பதக் உள்ளிட்டோர் நாளை மணிப்பூர் செல்லும் குழுவில் இடம் பெறும் எம்.பி.க்கள் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி. சுஷ்மிதா தேவ் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், நாளை மணிப்பூர் செல்லும் குழுவில் இடம்பெறுகிறோம். மணிப்பூரின் உண்மை நிலைமை என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம். ஆகையால் "இந்தியா" கூட்டணி குழுவை மாநில அரசு அனுமதிக்க வேண்டும். மணிப்பூர் வன்முறைகளை வெளிஉலகுக்கு ஊடகங்கள்தான் கொண்டு வந்தன. ஆனாலும் இன்னமும் வெளியே வராத பல சம்பவங்கள் மணிப்பூரில் இருக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிபப்டையில் அந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் நாங்கள் வெளியே கொண்டு வருவோம் என்றார்.
சமாஜ்வாதி கட்சி எம்.பி எஸ்டி ஹூசைன் கூறுகையில், மணிப்பூர் உண்மை நிலைமையை அறிய "இந்தியா" கூட்டணி எம்.பி.க்களை அம்மாநில அரசு அனுமதிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications