தவிக்கின்றேன்.. சில மாசம் முன்பு பார்த்தோமே.. சண்முகத்திற்கு என்ன ஆனது? கலங்கும் தயாநிதி மாறன்
டெல்லி: மூத்த ஊடகவியலாளர் ஷம்மி என்ற சண்முகத்தின் மறைவிற்கு திமுக எம்பி தயாநிதி மாறன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் ஷம்மி என்ற சண்முகம் முன்பு சன் டிவியில் பணியாற்றிவர். அந்த சேனலில் வரும் குரல் இவருடையதுதான்.
இவரின் கம்பீர குரல்தான் சன் டிவியில் ஒரு காலத்தில் முக்கிய அடையாளமாக இருந்தது. 90ஸ், 80ஸ் பலருக்கு இவரின் வசீகர குரல் என்பது மிகவும் பிடித்தமானது.
சன் செய்திகளில் 'சிறப்புப் பார்வை' என்ற நிகழ்ச்சியும் இவரின் குரலின் கீழ் ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

நெருக்கம்
சன் டிவி தலைவர் கலாநிதி மாறன் மற்றும் எம்பி தயாநிதி மாறன் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமாகவும் இவர் இருந்தார். அதன்பின் நியூஸ் 7 தமிழ் சேனலில் இவர் பணிக்கு சேர்ந்தார். அங்கு நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றி வந்தார். இதையடுத்து சமீபத்தில் இவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது. உடலில் இவருக்கு சில பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக இவர் சிகிச்சை பெற்று வந்தார்,

சிகிச்சை
சமீபத்தில் இவருக்கு முக்கிய சிகிச்சை ஒன்று செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் நேற்று உடல்நிலை மோசமாகி சண்முகம் காலமானார். ஷம்மி என்ற பெயரில் ஊடக துறையில் அன்பாக அழைக்கப்பட்ட சண்முகத்தின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் சண்முகத்தின் மறைவிற்கு திமுக எம்பி தயாநிதி மாறன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

நெருக்கம்
இது தொடர்பாக தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள இரங்கலில், தொலைக்காட்சி செய்தி வாசிப்பில் தனித்துவம் படைத்தவர். எனது தேர்தல் பிரச்சாரத்தின் போதெல்லாம் இவருடைய கம்பீரமான காந்தக் குரல் ஒலிக்காத தெருக்களே இல்லை என்கிற அளவுக்கு தனது வசீகரக் குரலால் அனைவரையும் ஈர்த்த உடன்பிறவா சகோதரர் M.சண்முகம் அவர்களை இழந்து தவிக்கின்றேன். அவர் நம்மை விட்டுப் பிரியலாம், அவரது நினைவுகள் என்றுமே அகலாது.

இரங்கல்
சில மாதங்களுக்கு முன்னர் என்னை சந்தித்து ஓவியம் ஒன்றினை அன்போடு வழங்கிய நிகழ்வு இன்னமும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. திரு.M.சண்முகத்தை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன், என்று தயாநிதி மாறன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடன் நெருக்கமாக பழகிய பலர் சண்முகத்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications