சர்வாதிகாரத்தை நோக்கி செல்லும் மத்திய பாஜக அரசு- லோக்சபாவில் சரமாரியாக வெளுத்த கனிமொழி எம்பி
லோக்சபாவில் திமுக எம்பி கனிமொழி மத்திய பாஜக அரசை காட்டமாக தாக்கி பேசினார்.
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசு சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று லோக்சபாவில் திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்தார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கனிமொழி எம்பி பேசியதாவது: மத்திய பாஜக அரசு ஒற்றைத் தன்மையை உருவாக்க விரும்புகிறது. ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக அரசு நினைக்கிறது. அது ஒரு போதும் நடக்காது. மாநிலங்களின் சாதனைகளை, உழைப்பை, ஆற்றலை, அதிகாரத்தை சிறுமைப்படுத்தும் பாஜக அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் தோல்வி அடைந்துள்ளது.

ஒரே நாடு, ஒரு ரேஷன் கார்டு தொடங்கி ஒரே கட்சி என்ற திட்டத்தைக் கொண்டுவர பா.ஜ.க நினைக்கிறது. அந்த திட்டம் ஒருபோதும் பலிக்காது. தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா என பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். தமிழ்நாட்டில் தேர்தல் எதுவும் இல்லை என்பதால் ஜனாதிபதி உரையில் திருக்குறளை மேற்கோள் காட்ட மத்திய அரசு மறந்துவிட்டது. தமிழ்நாட்டில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும்.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. நமது நாட்டில் சுமார் 4 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இருக்கின்றனர்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. மத்திய பாஜக அரசு சர்வாதிகார திட்டத்தை நோக்கிப் பயணிக்கிறது. நாடாளுமன்றத்தை மதிக்காமல் ஆலோசனை நடத்தாமல் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாகச் செயல்படுகிறது. சமஸ்கிருதத்திற்கு ரூ.198.98 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு. ஆனால் தமிழுக்கு ரூ.11.86 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.4 ஆண்டுகளுக்கு முன் மதுரை எய்ம்ஸ்-க்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்று வரை மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 20-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதேநேரத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறுதலை பெருமிதமாக பாஜக எம்பி பேசுகிற அவலம் இருக்கிறது. இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.












Click it and Unblock the Notifications