பெருமை! வரலாற்று சிறப்புமிக்க மசோதா விவாதத்தின்போது ராஜ்யசபாவை வழிநடத்திய திமுக எம்.பி கனிமொழி சோமு!
டெல்லி: புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தில் மாநிலங்களவையின் மாற்று தலைவராக தி.மு.க எம்.பி டாக்டர் கனிமொழி என்.வி.என் சோமு அவையை வழிநடத்தினார்.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று அனைத்துக் கட்சி எம்.பிக்கள் பங்கேற்ற விவாதம் நடைபெற்று பின்னர் வாக்கெடுப்பின் மூலம் ஏகமனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, மசோதாவை ஆதரித்து பேசிய திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி என்.வி.என். சோமு, பெண்கள் முன்னேற்றத்திற்காக நீதிக்கட்சி காலம் தொடங்கி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வரை செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டதோடு, பாஜக அரசு இந்த மசோதாவை கொண்டு வந்ததன் உள்நோக்கம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை திமுகவின் கொள்கை முழக்கமாக ஆதரிப்பதோடு இதனை பாஜக அரசு எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறது என்ற கேள்வியையும் எழுப்பினார் கனிமொழி என்.வி.என்.சோமு. மேலும், பெண்கள் மீதான அக்கறை பாஜகவுக்கு உண்மையாகவே இருந்தால் உடனே இந்த மசோதாவை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததோடு.. "சரி ...நிச்சயம் பண்ணியாச்சு, கல்யாணம் எப்போ ?" என்ற கேள்வியோடு உரையை நிறைவு செய்தார் கனிமொழி சோமு.
அதைத்தொடர்ந்து, இன்று மாநிலங்களவையில் நடைபெற்ற மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தின்போது அவையை வழிநடத்தும் மாற்று தலைவராக, சபாநாயகர் இருக்கையில் அமரவைக்கப்பட்டார் திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி என்விஎன் சோமு.
இதுதொடர்பாக எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி சோமு, "புதிய நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக மாநிலங்களவை விவாதத்தை வழிநடத்தும் மாற்று தலைவர் வாய்ப்பு இன்று கிடைக்கப் பெற்றேன்! இதற்காக எங்களை வழிநடத்தும் எங்கள் கட்சியின் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும், திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா அவர்களுக்கும் நன்றி!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications