நாங்கள் அறிவார்ந்தவர்கள்.. அதனால்தான் பாஜக தெற்கில் தோற்கிறது.. லோக்சபாவை அதிர வைத்த டி.ஆர் பாலு
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எங்கே, அவர்கள் ஏன் அவைக்கு வரவில்லை என்று திமுக எம். பி டி.ஆர் பாலு லோக்சபாவில் கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
டெல்லி: அறிவார்ந்த மக்கள் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பது இல்லை, அதனால்தான் பாஜக கட்சியால் தெற்கில் வெற்றிபெற முடியவில்லை என்று திமுக எம். பி டி.ஆர் பாலு லோக்சபாவில் பேசி உள்ளார்.
நேற்று காலை அதிரடி திருப்பமாக ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. ராஜ்யசபாவில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. நேற்று இந்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 61 வாக்குகளும் பதிவாகின.
இந்த நிலையில் தற்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கப்படுவதற்கான சட்ட மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் செய்யப்பட்டு வருகிறது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் லோக்சபாவிலும் மசோதாவை தீவிரமாக எதிர்த்தது.
என்ன சொன்னார்
லோக்சபாவில் இதை எதிர்த்து பேசிய திமுக எம். பி டி.ஆர் பாலு, அனைத்து விதிகளையும் மீறி காஷ்மீர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை உள்துறை அமைச்சர் மீறியுள்ளார்.காஷ்மீர் தலைவர்களின் நிலைமை என்ன? அவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளீர்கள், ஏன் என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.
சிறை
காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார்கள். உமர் அப்துல்லாவும், மெகபூபா முப்தியும் நேற்று இரவே கைது செய்யப்பட்டு உள்ளனர்.இன்று நாடாளுமன்றம் வர வேண்டிய பரூக் அப்துல்லாவும் அவைக்கு வரவில்லை. இவர்கள் மூன்று பேரும் எங்கே..? அவர்கள் எங்கே சென்றார்கள். நாட்டில் என்ன அவசர நிலையா நீடிக்கிறது.
ராணுவம்
மிக மிக மோசமாக ராணுவத்தை வைத்து இந்த மத்திய அரசு ஒரு சட்டத்தை நீக்கி இருப்பது பெரிய அதிர்ச்சி அளிக்கிறது, நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உங்களை பாராட்டுகிறோம். நீங்கள் உங்கள் எம்பிக்களை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறீர்கள். ஆட்சியை பெரும்பான்மையுடன் பிடித்து உள்ளீர்கள். இந்த மசோதாவை கூட நீங்கள் எளிதாக நிறைவேற்றிவிடுவீர்கள். நான் அதை பற்றி கவலைப்படவில்லை.
என்ன சாதனை
நான் கேட்பது இதன் மூலம் நீங்கள் என்ன சாதிக்க போகிறீர்கள்.காஷ்மீர் சட்டசபையை உருவாக்கி நீங்கள் இந்த சட்டத்தை நீக்கலாமே. ஏன் நீங்கள் பொறுமை காக்க கூடாது. காஷ்மீர் மக்கள் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், நீங்கள் காஷ்மீரில் தேர்தலில் நின்று வென்று, அதன்பின் அங்கு சட்டசபையில் இந்த சிறப்பு அதிகாரத்தை நீக்கலாமே.
ஏன் இல்லை
ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை. உங்களுக்கு எல்லாம் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அவ்வளவுதான். அதை இப்போது அவசர அவசரமாக செய்துவிட்டீர்கள். இடையில் இருக்கும் எதையும் நீங்கள் கருத்தில் கொள்ளவில்லை. நீங்கள் சரியாக இருந்தீர்கள் என்றால் காஷ்மீர் மக்களே உங்களுக்கு வாக்கு அளிப்பார்கள்.
ஏன்
ஆனால் உங்களுக்கே தெரியும் அது நடக்காது என்று. எல்லா இடத்திலும் நீங்கள் மெஜாரிட்டி பெறுகிறீர்கள். ஆனால் தெற்கில் உங்களால் மெஜாரிட்டி பெற முடியவில்லை. ஏன் உங்களால் தெற்கில் வெற்றிபெற முடியவில்லை. கேரளாவில் முடியவில்லை, தமிழ்நாட்டில் வெற்றிபெற முடியவில்லை. ஏன் என்று உங்களால் கொஞ்சம் விளக்க முடியுமா?
சொல்லுங்கள்
நீங்கள் பிறரை பார்த்து சிரிக்கிறீர்கள். ஆனால் எங்களை பார்த்து சிரிக்க முடியாது. கேரளாவை பார்த்து சிரிக்க முடியாது. சொல்லுங்கள், ஏன் உங்களால் தமிழ்நாட்டில் வெல்ல முடியவில்லை. நான் சொல்கிறேன், அறிவார்ந்த மக்கள் உங்களுடன் இல்லை. விஷயம் தெரிந்த மக்கள் உங்களுடன் இல்லை, அவர்கள் எப்போதும் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று டி.ஆர் பாலு ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.