டெல்லியில் திமுக எம்.பிக்கள் முக்கிய மீட்டிங்.. நாடாளுமன்ற விவகாரம் பற்றி ஆலோசிப்பதாக தகவல்
டெல்லி: டெல்லியில் திமுக உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். டிஆர் பாலு, திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் திமுக சார்பில் தமிழகம் சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் எனத்தெரிகிறது.
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அரசு நேற்று வேண்டுகோள் விடுத்து இருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தான் போர், டிரம்ப் கருத்து, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகியவை குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து அனைத்து விவாதத்துக்கும் தயார் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுந்து பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தகவல்களை பற்றி விவாதிக்க சபைக்கு வலியுறுத்தினர்.
இரு அவைகளிலும் அமளி நீடித்ததால் முதலில் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது. பிறகு லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. நாளை பீகாரில் நடைபெற்று வரும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் திமுக எம்பிக்கள் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டனர்.
டெல்லியில் உள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயத்தில் திமுக எம்பி கனிமொழி, டி ஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க கூடிய தமிழகம் சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் எனத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications