கிடப்பிலேயே கிடக்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழக மசோதா.. ராஜ்யசபாவில் திமுக கேள்வி!
டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா 3 ஆண்டுகளாக கிடப்பிலேயே இருப்பது ஏன்? தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தரும் மசோதாவுக்கு ஒப்புதல் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் திமுக எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ராஜ்யசபாவில் இன்று திமுக எம்பி வில்சன் பேசியதாவது: 90% சட்ட பிரிவுகள் முந்தைய ஐபிசி சட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. பிறகு எதற்கு கிரிமினல் சட்டங்களுக்கு சமஸ்கிருத பெயர் வைக்க வேண்டும்?.146 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு விவாதம் இல்லாமல் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகம் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இன்று நீட் மோசடி குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் மோடி உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வு,மோசடி காரணமாக பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கருணாநிதி ஆட்சியின் போது நீட் தேர்வுக்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கினர். தற்போது தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசும் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.31,600 கோடி வழங்க வேண்டும். ஆனால் இதுவரை ஒன்றிய அரசு நிதியை வழங்கவில்லை. எனவே உரிய நிதியை ஒதுக்க வேண்டும். வெள்ள நிவாரண நிதி ரூ. 37 ஆயிரம் கோடி தமிழ்நாடு கோரிய நிலையில் ரூ. 267 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இவ்வாறு வில்சன் எம்பி பேசினார்.
முன்னதாக நேற்று ராஜ்யசபாவில் பேசிய திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா, புதிய கல்வி அமைச்சர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது.நாங்கள் உடனே நடவடிக்கை எடுத்து விட்டோம் என்கிறீர்கள். ஆனால் இந்த தவறுகள் ஏன் நடைபெற்றது?
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு முந்தையை காங்கிரஸ் ஆட்சியில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் நீங்கள் அமல்படுத்தினீர்கள். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும். நீட் வேண்டாம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்க மறுப்பது ஏன்? மசோதாக்களை ஜனாதிபதி நிறுத்தி வைத்திருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications