யுபிஎஸ்சி நியமனத்தில் இடஒதுக்கீடு எங்கே? அரசியல் சாசன மீறல்- திமுக, ஆர்ஜேடி, காங்கிரஸ் எதிர்ப்பு
டெல்லி: இடஒதுக்கீடு இல்லாமல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி நியமனங்களை மேற்கொண்டிருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. "எந்த இட ஒதுக்கீடும் வழங்காமல், 10 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குனர் / துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது" என திமுக எம்பி வில்சன் சாடியுள்ளார்.
இது தொடர்பாக திமுக ராஜ்யசபா எம்பி வில்சன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஆட்சேர்ப்பு செயல்முறையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற அரசியல் சாசன உத்தரவை யு.பி.எஸ்.சி., எப்படி புறக்கணித்துள்ளது என்பதற்கு யு.பி.எஸ்.சி., இன்று வெளியிட்டுள்ள பின்வரும் விளம்பரம் ஒரு சிறந்த உதாரணமாகும்.

பதவிகளுக்கான எந்த இட ஒதுக்கீடும் வழங்காமல், 10 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குனர் / துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒன்றிய அரசு ஊழியர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது!
சாதாரணமாக இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடும்போது, மொத்தமுள்ள 45 இணைச் செயலாளர் மற்றும் இயக்குநர் / துணை செயலாளர் பதவிகளில் குறைந்தது 22-23 விண்ணப்பதாரர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்சி / எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.இது அரசியல் சாசனத்தை மீறும் செயல் இல்லையா?

மாண்புமிகு பிரதமர் அவர்களே, நீங்கள் இந்த சட்டவிரோதமான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சேர்ப்பு செயல்முறையை தொடரப் போகிறீர்களா அல்லது அரசியல் சட்ட இடஒதுக்கீட்டு முறையை செயல்படுத்தி புதிய நியமனத்திற்கு அழைப்பு விடுக்கப் போகிறீர்களா? இவ்வாறு திமுக எம்பி வில்சன் பதிவிட்டுள்ளார்.
இதேபோல காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆர்ஜேடி மூத்த தலைவரும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் யுபிஎஸ்சி-ன் இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான நியமனங்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications