ஒன்னல்ல ரெண்டல்ல! மொத்தம் 9 வந்தே பாரத் ரயில்கள் நாளை தொடக்கம்.. எந்தெந்த வழித்தடங்கள் தெரியுமா?
டெல்லி: நாளை டெல்லியில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் 9 வெவ்வேறு வழித்தடங்களுக்கான வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
வந்தே பாரத் ரயில்களின் என்ஜின்கள் தமிழகத்தில் பெரம்பூர் ஐசிஎஃப்பில் செய்யப்படுகிறது. இது புல்லட் ரயில் போல் வேகத்தில் இயங்கும். இந்த ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைய உள்ளன. இதில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி என அனைத்தும் உள்ளது.

நெடுந்தூரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த வந்தே பாரத் ரயில் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை- மைசூர், சென்னை- கோவை, திருவனந்தபுரம்- காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து நெல்லை- சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய இணையமைச்சர் எல் முருகன் வெளியிட்டிருந்தார். திண்டுக்கல்- மதுரை- நெல்லை இடையிலான தண்டவாளததை 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் பலப்படுத்த வேண்டும்.
அதன் மூலம் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 7 மணி நேரமாக குறையும். அத்துடன் ரயில்வே அறிவித்தபடி ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. நெல்லையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், பிற்பகல் 2 மணிக்கு சென்னை வந்தடையும். மீண்டும் சென்னையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11 மணிக்கு நெல்லையை சென்றடையும் என தெரிகிறது.
நெல்லையிலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ரயிலானது நாளை தொடங்கப்படுகிறது. இதற்கான கட்டண விவரங்கள் எல்லாம் வெளியாகிவிட்டன.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில் திட்டத்தை காணொலி மூலம் திறந்து வைக்கிறார். அவர் இந்த ஒரு ரயிலை மட்டும் தொடங்கி வைக்கவில்லை. மொத்தம் 9 ரயில்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். 9 வெவ்வேறு வழித்தடங்களில் ரயில் திட்டங்கள் தொடங்கப்படுகின்றன.
அவை என்னென்ன வழித்தடங்கள் என்பதை பார்ப்போம்.
பெங்களூர் (யஸ்வந்த்பூர்) - ஹைதராபாத் (கச்சிகுடா)
நெல்லை- சென்னை எழும்பூர்
காசர்கோடு- திருவனந்தபுரம் (வழி ஆலப்புழா)
விஜயவாடா - சென்னை சென்ட்ரல்
புரி- ரூர்கேலா,
உதய்பூர்- ஜெய்ப்பூர்
பாட்னா- ஹவுரா
ராஞ்சி டூ ஹவுரா
ஜாம்நகர்- ஆமதாபாத் (சபர்மதி)
மேற்கண்ட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளும் தொடங்கி வைக்கப்படவுள்ளன. இந்தியாவில் ஏற்கெனவே 25 வழித்தடங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கும் போது இந்த 9 வழித்தடங்களும் சேர்ந்தால் இந்தியாவில் மொத்தம் 34 வந்தே பாரத் ரயில்களின் இயக்கம் இருக்கும்.












Click it and Unblock the Notifications