ஆதார் நகல்களை கேட்டா கொடுக்காதீங்க.. மத்திய அரசு அறிக்கை.. திடீரென வாபஸ்.. என்ன நடந்தது?
டெல்லி: எந்தவொரு நிறுவனத்திற்கும் ஆதார் நகல்களை மக்கள் அளிக்க கூடாது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு அதை வாபஸ் பெற்றுள்ளது. ஆதார் அட்டைகளை பயன்படுத்துவது தொடர்பாக முக்கியமான ஆலோசனைகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.
இந்தியாவில் அனைவருக்குமான அடையாள அட்டையாக ஆதார் அட்டை உள்ளது. பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய உலக அளவில் மிகப்பெரிய அடையாள அட்டை அமைப்பாக ஆதார் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
ஆதார் அட்டையை பலர் எதிர்த்து வந்தாலும், 2018ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஆதார் செல்லும் என்று அறிவித்தது. இது தனிப்பட்ட தகவல்களை கொண்டு இருக்கும், ஏமாற்ற முடியாத அடையாள அட்டை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

கட்டாயம் கூடாது
அதே சமயம் தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறியது. மிக முக்கியமாக குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் ஆதார் இல்லை என்பதற்காக மறுக்கக் கூடாது. இந்த நிலையில் பல்வேறு சேவைகளை வழங்க ஆதார் கட்டாயம் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் தனியார் நிறுவனங்கள் பல அடையாள அட்டையாக ஆதார் அட்டைகளை கேட்டு வருகிறது.

கேட்க கூடாது
வங்கிகளும் லோன் எடுப்பது தொடங்கி பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் அட்டைகளை அடையாளமாக கேட்டு வருகிறது. ஹோட்டல்களில் கூட அடையாளத்திற்கு ஆதார் அட்டை கேட்கப்படுகிறது. இந்த நிலையில்தான் எந்தவொரு நிறுவனங்களுக்கும் ஆதார் நகல்களை மக்கள் அளிக்க கூடாது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டைகளை பயன்படுத்துவது தொடர்பாக முக்கியமான சில ஆலோசனைகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.

கட்டாயம் இல்லை
அதில், ஆதார் விவரங்களை மக்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதை எந்த நிறுவனங்களுக்கும் கொடுக்க கூடாது. ஆதார் விவரங்களை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. பொது இடங்களில் ஆதாரினை பதிவிறக்கம் செய்ய கூடாது. பொது இடங்களில், அதாவது கம்ப்யுட்டர் சென்டர் போன்ற இடங்களில் ஆதார் விவரங்களை தரவிறக்கம் செய்தால் அதை அங்கிருந்து டெலிட் செய்துவிட வேண்டும்.

ஆதார் அட்டை
மாஸ்க்ட் ஆதார் எனப்படும் கடைசி 4 இலக்கங்கள் கொண்ட ஆதார் கார்டினை பயன்படுத்தவும். இதில் கடைசி 4 டிஜிட் மட்டுமே இருக்கும். அதனால் இதை பயன்படுத்த வேண்டும். UIDAI அனுமதி பெற்ற நிறுவனங்கள் மட்டுமே ஆதாரை அடையாள அட்டையாக கேட்க முடியும். தனியார் நிறுவனங்கள், ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள் ஆகியவை எக்காரணம் கொண்டும் ஆதார் அட்டைகளை அடையாளத்திற்கு கேட்க கூடாது.

ஆதார் சட்டம்
ஆதார் சட்டம் 2016 படி இது விதிமீறல் ஆகும். அப்படியே ஆதார் அட்டைகளை வாங்கி இருந்தாலும், அதன் விவரங்களை வைத்திருக்க கூடாது. சேமித்து வைக்கப்பட்ட விவரங்களை உடனே அழித்துவிட வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதையும் மீறி உங்களிடம் ஆதார் அட்டை விவரங்களை கேட்டால் அவர்களிடம் UIDAI அனுமதி சான்றிதழ் இருக்கிறதா என்று சோதித்துக்கொள்ளுங்கள், என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

விளக்கம்
இந்த நிலையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பாக இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அறிக்கை ஆதார் ஆணையத்தின் மண்டல அதிகாரி ஒருவர் மூலம் வெளியிடப்பட்டது. ஆதார் போட்டோகாப்பி (ஜெராக்ஸ்) மூலம் முறைகேடு நடக்க கூடாது என்பதால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கையை சிலர் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளதால் அறிக்கையை திரும்ப பெற முடிவெடுக்கிறோம். அதே சமயம் ஆதார் விவரங்களை தரும் போது எப்போதும் பின்பற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications