டார்கெட் பிக்ஸ்.. த்ரீ டூ ஒன் திக்திக் நொடிகள்.. சீறிப்பாய்ந்த ஏர் ஏவுகணை.. உற்சாகத்தில் டிஆர்டிஓ..!
டெல்லி : வானில் எவ்வளவு வேகமாக சென்றாலும் எதிரி நாட்டின் போர் விமானங்களை குறிவைத்து துல்லியமாக தாக்கி அழிக்கும் இந்திய ராணுவத்திற்கான ஏவுகணைகளை வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதித்துள்ளது
Recommended Video
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் உள்நாட்டிலேயே ஏராளமான ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது.
ஏற்கனவே அக்னி வரிசையில் ஒன்று முதல் ஐந்து வரையிலான ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
ஏவுகணை தொழில்நுட்பம்
இதில் 1 முதல் 3 வரையிலான ஏவுகணைகள் இந்திய ராணுவத்திலும் தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஏற்கனவே 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையில் 8,000 முதல் 10,000 கிலோ மீட்டர் பயணம் செய்து இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி 6 ஏவுகணையை இந்தியா உருவாக்கி வருகிறது. இதேபோல் தரையில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் உள்ள இலக்கை ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 2,000 கிலோ மீட்டர் வரை இருந்தாலும் துல்லியமாக தாக்கும் வலிமை கொண்ட அக்னி பிரைம் ஏவுகணை ஏற்கனவே வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
சோதனை வெற்றி
இந்த நிலையில் வானில் எவ்வளவு வேகமாக சென்றாலும் எதிரி நாட்டின் போர் விமானங்களை குறிவைத்து துல்லியமாக தாக்கி அழிக்கும் இந்திய ராணுவத்திற்கான ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது டிஆர்டிஓ. ஒடிசாவின் சந்திபூர் ஏவுகணை தளத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஏவுகணைகளை வடிவமைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
துல்லியமாக தாக்கும்
வானில் அதிவேகமாக செல்லும் எதிரி நாட்டுப் படையினரின் போர் விமானங்களை தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் போர் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் எனவும், இந்த ஏவுகணை சோதனை எதிர்பார்த்த வெற்றியைக் கொடுத்துள்ளது என்றும், நடுத்தரதொலைவு சென்று தாக்கும் இந்த வகையான ஏவுகணைகள் ஏவுகணைத் தளம் மற்றும் நடமாடும் வாகனங்களின் மூலம் செலுத்த முடியும் எனவும் டிஆர்டிஓ கூறியுள்ளது.
ராஜ்நாத்சிங் பாராட்டு
ஒடிசா சந்திப்பூர் ஏவுகணை தளத்தில் இந்திய நேரப்படி 10:30 மணிக்கு வெற்றிகரமாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த ஏவுகணை சோதனையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அருகிலுள்ள பாலசோர் மற்றும் மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் டிஆர்டிஓ கூறியுள்ளது. இந்நிலையில் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.