15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்பு- தலைமை நீதிபதி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்
டெல்லி: நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றார். டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரவுபதி முர்முவுக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்
Recommended Video
ராம்நாத் கோவிந்தின் ஜனாதிபதி பதவி காலம் நிறைவடைந்த நிலையில் கடந்த 18-ந் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் ஒடிஷாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவும் எதிர்க்கட்சிகள் சார்பாக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இதில் திரவுபதி முர்மு அமோக வெற்றி பெற்று நாட்டின் புதிய ஜனாதிபதியானார்.

நாடு விடுதலை அடைந்த பின் பிறந்த ஒருவர் ஜனாதிபதியாக பதவியேற்பது இதுவே முதல் முறை. நாட்டின் வரலாற்றில் பழங்குடி இனப் பெண் ஒருவர் ஜனாதிபதியாவதும் முதல் முறை. ஒடிஷா மாநிலம் ராய்ரங்பூரில் பிறந்து முதலில் அரசுப் பணியில் இளநிலை உதவியாளர், பின்ன ஆசிரியர் பணியாற்றி அரசியலுக்குள் நுழைந்தவர் திரவுபதி முர்மு. உள்ளாட்சி பிரதிநிதியாக, எம்.எல்.ஏ, எம்.பி.யாக, அமைச்சராக, ஆளுநராக அரசியலிம் உச்சம் தொட்ட திரவுபதி முர்மு இன்று தேசத்தின் ஜனாதிபதி அரியாசனத்தில் அமருகிறார்.
டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நாடாளுமன்ற மைய மண்டபம் விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று காலை 9.25 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு திரவுபதி முர்மு சென்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமது குடும்பத்தினருடன் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அங்கிருந்து 9.50 மணிக்கு ராம்நாத் கோவிந்த், திரவுபதி முர்மு இருவரும் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு குதிரைப்படை அணிவகுப்புடன் புறப்பட்டனர். நாடாளுமன்றத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் திரவுபதி முர்முவை வரவேற்றனர்.

இதனையடுத்து நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications